நீலகிரி மாவட்டம்,` கூடலூர் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட லார்ஸ்டன் மற்றும் மஞ்சுஸ்ரீ எஸ்டேட் பகுதிகளில் நடமாடி வந்த ஆட்கொல்லி புலி அடுத்தடுத்து இரண்டு மனிதர்களைத் தாக்கி கொன்றது. ஆகஸ்ட் 9- ம் தேதி பாலகிருஷ்ணன் (58) என்பவர் வீட்டிற்கு அருகில் குடிநீர் குழாய் சரிசெய்ய சென்ற போது புலி தாக்கி கொல்லப்பட்டார். ஆகஸ்ட் 21- ம் தேதி விச்சந்திரன் என்ற மற்றொரு தோட்ட தொழிலாளி ஒருவரையும் அதே புலி தாக்கி கொன்றது. அடுத்தடுத்து இரண்டு பேரை கொன்றுத் தின்ற புலியை பிடிக்க தீவிர நடவடிக்கை தொடங்கப்பட்டது.

புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 300 தானியங்கி கேமராக்கள் மற்றும் 3 தெர்மல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. ஓவேலி காடுகளின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 13 இடங்களில் இரும்பு கூண்டுகள் இறைச்சி மற்றும் ஆடு போன்ற இரைகளுடன் வைக்கப்பட்டன. முதுமலையிலிருந்து “உதயன்’ உள்ளிட்ட 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. வனத்துறையின் கால்நடை மருத்துவர்கள், அதிரடிப்படையினர் மற்றும் எலைட் ஃபோர்ஸ் ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் கடந்த 28 நாள்களாக புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். புலியைத் தேடும் பணியின் போது, வனத்துறை வைத்த கூண்டுகளில் எதிர்பாராத விதமாக இரண்டு முறை சிறுத்தைகள் சிக்கின. அந்த சிறுத்தைகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்துவிட்டு, புலியை தேடும் பணியைத் தொடர்ந்தனர்.