புள்ளிப் பட்டியலில் பெரியளவில் மாற்றமில்லை, இருப்பினும் இந்த ஒரு போட்டியின் முடிவு சன்ரைசர்ஸை பிளே ஆஃப்புக்கு அருகாமையிலும் மும்பை இந்தியன்ஸை அதைவிட்டு தள்ளியும் வைத்துள்ளது.!
இரு வெற்றிகளை மட்டுமே நடப்பு சீசனில் ருசித்திருந்த மும்பைக்கு சன்ரைசர்ஸுடனான இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. பிளே ஆஃப் கனவை அதுதான் உயிர்ப்போடு வைத்திருக்கும் என்பதால் இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும் வென்றாக வேண்டிய கட்டாயம் மும்பை இந்தியன்ஸுக்கு.
பொதுவாகவே பிளேயிங் லெவனில் பல்லாங்குழி ஆடுவது மும்பை இந்தியன்ஸின் பாணியில்லை. ஆனால் நடப்பு சீசனில் எட்டாவது போட்டிக்குள்ளேயே 22 வீரர்களை மும்பை தரப்பு பயன்படுத்தி விட்டது. இது சரியான திக்கில்தான் மும்பை இந்தியன்ஸ் பயணிக்கிறதா என்ற கேள்வியை திரும்பத்திரும்ப எழ வைத்தது. சன்ரைசர்ஸுக்கு எதிரான இப்போட்டியில்கூட ஹோல்சேல் மாற்றமாக நான்கு வீரர்களை அதிரடியாக நீக்கி, நான்கு வீரர்களைச் சேர்த்திருந்தனர்.
சரியான பிளேயிங் லெவன் அமையாதது தடுமாற்றம் என்றால் அதைவிடவும் மோசமாக மும்பை எக்ஸ்பிரஸே தடம் புரளும் மாற்றம் ஓப்பனர்களை ஐந்து முறை மாற்ற வேண்டிய சூழல். ரியான் ரிக்கில்டன் கேகேஆருக்கு எதிரான போட்டியில் 188 ஸ்ட்ரைக்ரேட்டில் 81 ரன்களைச் சேர்த்த போதும், அதன்பின் வந்த நான்கு போட்டிகளில் மூன்றில் 9 ,8 மற்றும் 2 என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வேறுவழியின்றி அதற்கடுத்த இரு போட்டிகளில் வெளியே அமர வைக்கப்பட்டார்.