இப்படி நிறைகள் அதிகம் இருந்தாலும், ஒரு முழுப்படத்தை தாங்குவதற்கான திடமான கருப்பொருள் இல்லாதது படத்தின் முக்கிய குறை. சட்டரீதியான சிக்கல்கள் இருந்ததால் கடைசி நேரத்தில் குழந்தை வன்கொடுமை வழக்கு தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டு, சில காட்சிகளை மட்டும் ரீஷூட் செய்து படத்தை முடித்திருக்கிறார்கள். இதனால் பாதியிலேயே படம் முடிந்துவிடும் உணர்வு ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘அவர் கதை தொடரும்’ என்ற வாசகத்துடன் படம் முடிந்தாலும், சர்ச்சைகள் பற்றிப் பேசாமல் அவரது கதையின் அடுத்த அத்தியாயத்தை எப்படி முழுமையாகச் சொல்ல முடியும் என்ற கேள்வியும் அனைவருக்கும் இருக்கிறது.
இதனாலேயே, மைக்கேல் மீது எழுந்த சர்ச்சைகளை முற்றிலும் புறக்கணித்து அவரை புனிதராகச் சித்திரிக்கப் படம் முயற்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டை விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். இதன் காரணமாகவே ராட்டன் டொமேட்டோஸ் தளத்தில் வெறும் 38% விமர்சகர்கள் மட்டுமே படத்திற்கு நேர்மறையான விமர்சனம் அளித்திருக்கிறார்கள். ஆனால், அதே தளத்தில் 97% ரசிகர்கள் இதை நல்ல படமென மதிப்பிட்டிருக்கிறார்கள். விமர்சகர்கள் ஒற்றை விஷயத்தை மட்டும் முன்னிறுத்திப் படத்தை விமர்சிப்பது சரியான அணுகுமுறையல்ல என்ற கருத்தும் ரசிகர்களிடம் வலுவாக இருக்கிறது.
மைக்கேல் ஜாக்சன் எஸ்டேட் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் சர்ச்சைகளைப் பேசாது என்பது எப்படியும் எதிர்பார்த்த ஒன்றே. மைக்கேலின் மரணத்திற்கு பிறகும் அவரது அழியாத புகழாலும் படைப்புகளாலும் இதுவரை 3 பில்லியன் டாலர் வருமானத்தை மைக்கேல் ஜாக்சன் எஸ்டேட் ஈட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியிருக்க, மீண்டும் மைக்கேலின் புகழை வெள்ளித்திரை மூலம் உலகமெங்கும் கொண்டுசெல்வது மட்டுமே அவர்களது நோக்கமாக இருக்க முடியும் என்பதே நிதர்சனம்.