மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கித்தில் உருவாகியிருக்கும் ‘பெத்தி’ திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார்.
ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜூன் 4-ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது. பெத்தி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், “திரைத்துறையில் எனது ஆரம்ப காலமான ‘ரோஜா’ படத்தில் தொடங்கி 2000, 2010 எனக் காலம் மாறிக்கொண்டே வந்தாலும், அதற்கு ஏற்ப இசையும் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது.
தொடக்கத்தில் பல விதமான பரிசோதனை முயற்சிகளை (Experimental movies) செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது, அதைச் செய்து முடித்துவிட்டேன்.
ஆனால், இப்போது ‘பெத்தி’ திரைப்படத்தில் இருந்து முழுமையான கமர்சியல் படங்களை நோக்கி நகர்ந்துள்ளேன். ஏனெனில், இதுபோன்ற கமர்சியல் படங்களில் நடிகர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து நடிக்கிறார்கள், நடனமாடுகிறார்கள்.
மேலும், பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவதால், நமது உழைப்பு வீணாகாமல் பலரையும் சென்றடைகிறது. இந்தப் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் (Frame) உழைப்பைக் கொடுத்து உயிரோட்டமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
சினிமாவில் நம்மைப் பார்த்துப் பலரும் உத்வேகம் (Inspire) அடைவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களைப் பார்த்து நானும் உத்வேகம் அடைகிறேன். குறிப்பாக, தெலுங்குத் திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டால் கீரவாணி, தேவி ஸ்ரீ பிரசாத், தமன் போன்ற சிறந்த இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.

தெலுங்குத் திரைத்துறை இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அவர்களின் லட்சியம், பேராவல் மற்றும் தரம் என்னை மிகவும் ரசிக்க வைக்கிறது. அங்கு எடுக்கப்படும் சில திரைப்படங்கள் மாஸ் (Mass) படங்களாக இருந்தாலும், மக்களுக்கு என்ன தேவை என்பதில் அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு துறையில் இப்போது நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இத்தனை ஆண்டுகள் இசையமைத்த பிறகும், இந்த ‘பெத்தி’ படத்தில் பணிபுரியும்போது இது எனக்கு முதல் படம் போன்றதொரு புதிய உத்வேகத்தைத் தந்துள்ளது. படத்தின் பின்னணி இசைப் பணிகளை இன்று அதிகாலை 6:30 மணிக்குத்தான் முழுமையாக முடித்தேன்.
இப்படத்தின் நாயகன் ராம் சரணை ‘நாட்டு நாட்டு’ பாடல் மூலம் உலகமே கொண்டாடியிருக்கிறது. தற்போது ‘பெத்தி’ படத்தின் ‘சிக்கனி’ பாடல் வெளியான உடனே மெக்சிகோவில் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
மெக்சிகோவின் உள்ளூர் பாடல்களை விடவும் இந்தச் பாடல் அங்கு பெரிதாகக் கொண்டாடப்படுவதாக ஒரு கட்டுரையே வெளியாகியிருந்தது.
அண்மையில் மும்பை சென்றிருந்தபோது, இன்றைய தலைமுறை இசையை எப்படிப் பார்க்கிறது என்பதை உணர்ந்தேன். அங்கு ஒரு 12 வயது சிறுவன் என்னிடம் வந்து, ‘ராக்ஸ்டார்’ போன்ற படங்களை விடுத்து, ‘சிக்கனி’ பாடலுக்காக ஆட்டோகிராப் கேட்டான். ஒவ்வொரு திரைப்படமும் ஒரு புதிய பாதையை உருவாக்குகிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்களைப் பொறுத்தவரை, நான் ஏற்கனவே ‘லகான்’, ‘மைதான்’ போன்ற படங்களுக்கும், விளையாட்டு வீரர்களைப் பற்றிய சுயசரிதை படங்களுக்கும் இசையமைத்திருக்கிறேன். ஆனால், இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு பிரேமும் (Frame) எமோஷன்களால் நிரம்பியுள்ளது.
அதற்கு ஏற்றவாறு பின்னணி இசையும் அழுத்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கதாபாத்திரங்களின் மாற்றத்திற்கு ஏற்ப அந்த எமோஷன்களுக்கு எப்படி ஒரு கொண்டாட்டமான மற்றும் இதமான உணர்வைக் கொடுப்பது என்பதை யோசித்து இசையமைத்துள்ளேன்.
இயக்குனர் புச்சி பாபுவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், அவருக்கு ஒரு விஷயம் பிடித்திருந்தால் பிடிச்சிருக்கு என்று சொல்வார், பிடிக்கவில்லை என்றால் முகத்திற்கு நேராகவே பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுவார்.
அவர் முதலில் என்னிடம் வந்தபோதே, ‘உனக்கு நான் போடும் மெட்டு பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை, நீ ஆயிரம் முறை நிராகரித்தாலும் நான் உனக்காக அடுத்தடுத்த மெட்டுகளைக் கொடுப்பேன்’ என்று கூறி அவரிடமிருந்த பயத்தைப் போக்கினேன். ஏனெனில், இயக்குனர்களிடம் இருக்கும் அந்தப் பயத்தை முதலில் நீக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் தயக்கமின்றி வேலை வாங்க முடியும். நான் அவருக்காகச் சிறந்த இசையைக் கொடுக்க உழைத்திருக்கிறேன்.
எனக்குத் தனிப்பட்ட முறையில் ஓய்வு நேரம் (Free time) கிடைத்தால், என் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிடுவேன். இல்லையென்றால், ஏதாவது திரைப்படங்களைப் பார்ப்பேன். சென்னையைப் பொறுத்தவரை எனக்கு மிகவும் பிடித்தமான, அமைதியான இடம் எதுவென்றால், என் தாயாரின் நினைவிடம் (Memory) அமைந்துள்ள பகுதிதான். அங்குச் செல்வதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.