மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ராஜா சிவாஜி என்ற பெயரில் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் புதிய படம் ஒன்றைத் தயாரித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஒன்றாம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் சல்மான் கான், அபிஷேக் பச்சன் போன்ற முன்னணி நடிகர்கள் கெளரவ வேடத்தில் நடித்துக்கொடுத்துள்ளனர். நடிகர் சஞ்சய் தத் அப்ஷல்கானாக நடித்து இருக்கிறார்.

இதில் ரிதேஷ் தேஷ்முக் மனைவி ஜெனிலியா தேஷ்முக் ராஜா சிவாஜியின் மனைவியாக நடித்துள்ளார்.
முன்னணி நடிகர்கள் இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்து கொடுத்தது குறித்து ரிதேஷ் தேஷ்முக் அளித்த பேட்டியில், “‘ராஜா சிவாஜியின் ஒரு பகுதியாக இருக்கும் சல்மான் கான் மற்றும் அபிஷேக் பச்சனுடனான எனது நட்பு காரணமாக அவர்கள் இப்படத்தில் இணைய நேர்ந்தது.
சில உறவுகள் முற்றிலும் அன்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன. நடிகர் சல்மான் கான், அபிஷேக் பச்சன், வித்யா பாலன், ஃபர்தீன் கான், போமன் இரானி, ஜெனிலியா தேஷ்முக் மற்றும் நான் இப்படத்தில் நடிக்க சம்பளம் வாங்கவில்லை.
நாங்கள் அனைவரும் இந்தப் படம் இன்று இருக்க வேண்டும் என்பதற்காக முழுமையாக உழைத்தோம். இது ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நிபந்தனையற்ற சொல்லப்படாத அன்பும் மரியாதையும் ஆகும். நான் 23 ஆண்டுகளில் சம்பாதித்தது இதுதான்.
அவர்கள் அனைவருக்கும் நான் உண்மையிலேயே கடமைப்பட்டு இருக்கிறேன். அபிஷேக் பச்சனை இப்படத்தில் நடிக்கும்படி அழைத்தபோது அவர் என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்காமல் இதில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதோடு படத்தில் நடிக்க சம்பளம் குறித்து விவாதித்ததே இல்லை” என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பு ரிதேஷ் தேஷ்முக் அளித்திருந்த பேட்டியில், ”சல்மான் கான் என்னிடம் தனக்கு ராஜா சிவாஜியில் என்ன கதாபாத்திரம் என்று கேட்டதோடு தான் இல்லாமல் எப்படி என்று எனக்கு ஆச்சரியம் கொடுத்தார்” என்றார்.
ரிதேஷ் தேஷ்முக்கும், சல்மான் கானும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். சல்மான் கான் வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அதில் ரிதேஷ் தேஷ்முக் தம்பதி இல்லாமல் இருக்கமாட்டார்கள்.