குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரை சேர்ந்தவர் ஜிக்னேஷ். இவரது மனைவி பிரித்வி. ஜிக்னேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதாக பிரித்வி அவரின் உறவினர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் ஜிக்னேஷ் உறவினர் ஒருவர் ஆஸ்திரேலியா செல்ல முடிவு செய்தார். எனவே ஆஸ்திரேலியாவில் உள்ள ஜிக்னேஷ் தொடர்பு முகவரி மற்றும் போன் நம்பரை கொடுக்கும்படி கேட்டு வாங்கிச்சென்றார்.
ஆனால் அவரால் சரியான முகவரியை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து அந்த நபர் இது குறித்து ஜிக்னேஷ் சகோதரர் அசோக்கிடம் தெரிவித்தார். அசோக்கும் தனது சகோதரர் குறித்து பிரித்வியிடம் கேட்டார்.
ஆனால் அவர் சரியான பதில் அளிக்கவில்லை. எனவே தனது சகோதரரை காணவில்லை என்று கூறி அசோக் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜிக்னேஷை தேடி வந்த நிலையில் ஜிக்னேஷ் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் அவரை அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தியபோது அவரது அவரது காதலன் நிலேஷ் என்பவடன் சேர்ந்து ஜிக்னேஷை கொலை செய்து தொழிற்சாலை ஒன்றின் அடியில் அவரது உடலைப் புதைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் அப்பெண் தெரிவித்த இடத்தை தோண்டி ஜிக்னேஷ் உடலை எடுத்து டி.என்.ஏ.பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், “‘பிரித்விக்கு ஜிக்னேஷை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே நிலேஷுடன் தொடர்பு இருந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் அத்தொடர்பை இருவரும் தொடர்ந்துள்ளனர். அவர்கள் இருவரும் தங்களது தொடர்புக்கு தடையாக இருக்கும் ஜிக்னேஷை கொலை செய்ய முடிவு செய்தனர்.
இதற்காக ஜிக்னேஷ் அருந்தும் மதுவில் விஷம் கலந்து கொடுத்தனர். இதில் விக்னேஷ் இறந்தவுடன் அவரது உடலை எடுத்துச்சென்று தொழிற்சாலையில் புதைத்துவிட்டனர். அதன் பிறகு ஜிக்னேஷ் உறவினர்களிடம் அவர் வேலைக்காக ஆஸ்திரேலியா சென்று இருக்கிறார் என்று கூறி பிரித்வி நம்பவைத்தார்” என்றார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி பிரதிபா கூறுகையில்,’ ‘கொலை செய்யப்பட்ட ஜிக்னேஷ் மனைவியிடம் நடத்திய விசாரணையில், முழு விபரம் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், ஜிஐடிசி பகுதியில் உள்ள 12 அடி ஆழ குழியில் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம்,” என்று கூறினார்.