Tamil Cinema: "அந்த விஷயத்துல எங்களால கண்டிப்பா விட்டுக்கொடுக்க முடியாது!" – திருப்பூர் சுப்ரமணியம்

Spread the love

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை எனத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

திரையரங்க வெளியீட்டிற்கு 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி-யில் வெளியிட வேண்டும் என்பது தொடர்பாக விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் திரையரங்க உரிமையாளர்களும் எடுத்த தன்னிச்சையான முடிவைக் கண்டித்து இந்த முடிவை எடுப்பதாகத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது. இது தொடர்பாகத் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டியளித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை
தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

அவர் பேசுகையில், “எந்த ஒரு தொழிலிலுமே ஒரு பிரச்னை வந்துட்டா உட்கார்ந்து பேசுறதுதான் முதல்ல செய்ய வேண்டிய விஷயம். நாங்க ஏற்கனவே தயாரிப்பாளர்கள் தரப்புல மூணு முறை கூப்பிட்டு பேசிட்டோம்.

ஆனா அவங்க பேச்சுவார்த்தைக்கு உடன்படவே இல்லை. திடீர்னு செப்டம்பர் 4-ஆம் தேதியில இருந்து வேலைநிறுத்தம் அறிவிச்சிருக்காங்க. திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் படங்கள் ஓடிடி-யில் குறைந்தபட்சம் 8 வாரத்துக்குப் பிறகு ரிலீஸ் ஆகணும்.

இதுதான் நாங்க முன்வைக்கிற ஒரே கோரிக்கை. இப்படி ஒரு சூழல் வரும்போது எங்களைக் கூப்பிட்டு, “ஏன் இந்த மாதிரி சொல்றீங்க? வாங்க உட்கார்ந்து பேசலாம்”னு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்.

அரசு மூலமாக நம்ம கோரிக்கையைச் சொல்லி, ஒரு கூட்டத்தைக் கூட்டி தீர்வை நோக்கியாவது நகர்ந்திருக்கலாம். இது எதுவுமே இல்லாம, வேலைநிறுத்தத்தை அறிவிச்சிட்டு, “மாண்புமிகு முதலமைச்சர் இதைத் தீர்த்து வைப்பார்னு நம்புறோம்”னு சொல்றாங்க.

இன்னைக்கு முதல்வராக விஜய் இருக்கிறார். அவருக்கு சினிமாவை பத்தி எல்லாமே தெரியும், நல்ல அறிமுகமானவர்தான்.

தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள்னு யாருக்குமே அவர் அந்நியப்பட்டவர் கிடையாது.

அப்படி இருக்கும்போது நீங்க ஸ்ட்ரைக் அறிவிக்கிறதுக்கு முன்னாடி, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையோ அல்லது அதிகாரிகளையோ சந்திச்சு, “எங்களுக்கு இந்த மாதிரி பிரச்சனை இருக்கு.

எல்லாரையும் வச்சு ஒரு ஜாயிண்ட் மீட்டிங்கு ஏற்பாடு பண்ணுங்க”னு கேட்டு பேசிருக்கலாம். அதை விட்டுட்டு எடுத்த உடனே ஸ்ட்ரைக் அறிவிச்சிருக்காங்க.

திருப்பூர் சுப்ரமணியம்
திருப்பூர் சுப்ரமணியம்

திரையரங்கு உரிமையாளர்கள் எந்தக் காரணத்தினாலும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதில்லை. நாங்க திரையரங்குகளை தொடர்ந்து நடத்துவோம்.

புதுப் படங்கள் ரிலீஸ் ஆச்சுன்னா கண்டிப்பா திரையிடுவோம், எந்தப் படத்தையும் நாங்களா நிறுத்த மாட்டோம். ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட/வாங்கப்பட்ட படங்களுக்கு நாங்க விதிவிலக்கு தர்றோம்.

ஆனா, இனிமேல் வாங்குற படங்களை 8 வாரம் கழிச்சுதான் ஓடிடி-ல வெளியிடணும். உண்மையிலேயே ஆங்கிலப் படங்களைப் போல 90 நாட்கள் இடைவெளி இருந்தால்தான் சினிமாவுக்கு நல்லது. ஆனா நாங்க அவ்வளவு பிடிவாதம் பிடிக்கல.

8 வாரம் இருந்தா போதும்னு சொல்றோம். இந்த 8 வாரக் கெடு விஷயத்துல எங்களால கண்டிப்பா விட்டுக்கொடுக்க முடியாது. ஏன்னா, அவங்க நினைக்கிற மாதிரி 3 வாரத்துலயோ, 4 வாரத்துலயோ படங்களை ஓடிடி-யில் வெளியிடத் தொடங்கினால் எதிர்காலத்துல எங்களால திரையரங்குகளை நடத்தவே முடியாது.” எனப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *