TNPL தொடரில், போட்டிக்கான தடை செய்யப்பட்ட பகுதியில் (Players and Match Officials Area – PMOA) அனுமதியின்றி மொபைல் போன் வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட ரஞ்சி வீரருக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஊழல் தடுப்புப் பிரிவு ₹1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மேலும், அந்த வீரர் நடப்பு TNPL தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின்போது, வழக்கமான சோதனையில் வீரரிடம் அறிவிக்கப்படாத மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு உடனடியாக விசாரணை நடத்தி, அந்த வீரரின் விளக்கத்தையும் பரிசீலித்தது.
விசாரணையில், அந்த மொபைல் போன் மூலம் புக்கிகள் அல்லது மேட்ச் பிக்ஸிங் தொடர்பான எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது உறுதியானது.
இருப்பினும், போட்டி நடைபெறும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் அனுமதியின்றி தகவல் தொடர்பு சாதனத்தை வைத்திருப்பது, ஐசிசி மற்றும் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு விதிகளின்படி கடுமையான நடைமுறை மீறலாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீரருக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், நடப்பு TNPL தொடரிலிருந்து அவர் முழுமையாக நீக்கப்பட்டுள்ளார்.
அந்த வீரரின் அடையாளம், பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு (ACSU) அல்லது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) ஆகியவற்றால் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.