2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஆர்.கே.நகர் த.வெ.க வேட்பாளர் மரியவில்சன் அத்தொகுதி மக்களுக்கு ஏராளனமான வாக்குறுதிகளை அளித்து கவனம் ஈர்த்து வருகிறார்.
இன்னொருபுறம், அவர் மீது சில விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் எழுந்திருக்கின்றன. இவை அனைத்தையும் பற்றி தேர்தல் பிரசாரக் களத்தில் அவரைச் சந்தித்து கேள்விகளை முன்வைத்தோம்…
ஆர்.கே. நகர் இப்போது எப்படி இருக்கிறது?
இங்குள்ள மக்கள் கொடுக்கும் அன்புக்கும் பாசத்திற்கும் இந்தத் தொகுதி செழிப்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. கழிவுநீர் பிரச்னை, சுகாதாரக் குறைபாடுகள் அதிகமாக இருக்கின்றன. போதைப்பொருள் அட்டகாசத்தால் மாலை 6 மணிக்கு மேல் பெண்களால் வெளியே நடமாட முடியாத நிலை உருவாகிவிட்டது. இதைச் சரிசெய்யவே த.வெ.க தலைவர் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்.
கல்வி நிறுவனம் நடத்திக்கொண்டிருக்கும் நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்?
அரசியல் எங்கள் குடும்பத்திற்குப் புதியதல்ல. என் மாமனார் ஜேப்பியார் எம்ஜிஆரின் நெருங்கிய தோழர்; சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார். என் தாத்தா பால்ராஜ் தஞ்சாவூர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்தார்.
எங்களுடைய குடும்பத்தில் ஃபர்ஸ்ட் ஜெனரேஷனில் அரசியல் இருந்திருக்கிறது. நாங்கள் இரண்டாவது ஜெனரேஷனில் கல்வி சார்ந்து பயணித்து விட்டோம். அரசியலில் சற்று கேப் விழுந்துள்ளது அவ்வளவு தான்.

தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்த பிறகு தலைவருடைய வரவேற்பு மற்றும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘பிறப்பால் அனைவரும் சமம்‘ என்ற தலைவருடைய கொள்கைகள் என்னை ஈர்த்தன. அதுமட்டுமில்லாமல் ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளை அரசியல் எதிரி, கொள்கை எதிரி என்று அறிவித்துள்ளார்.
அதற்கெல்லாம் தனி துணிச்சல் வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தலைவர் விஜய் நோக்கித்தான் செல்கிறார்கள். அவர்தான் ஒரே நம்பிக்கை எனச் சொல்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன்.