வடமாநிலங்களில் இப்போது மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் அனைத்து சாலைகளும் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மற்றும் லக்னோ இடையே அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை மழை நீரில் சேதம் அடைந்துள்ளது. அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்படி இருந்தும் சாலையில் உள்ள ஈரம் காயாமல் இருக்கிறது.
அதனை காயவைக்க அதிகாரிகள் செய்த நூதன முயற்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த சாலையில் வாகனங்கள் வேறு வழியில் திருப்பிவிடப்பட்டு பழுதுபார்ப்பு பணிகள் நடந்து வருகிறது. அதில் ஈரம் காய்ந்த பிறகு பழுதுபார்க்க வேண்டும் என்பதற்காக ஈரத்தை காயவைக்க மின் விசிறிகளை கொண்டு வந்து ரோட்டில் வைத்துள்ளனர்.
நெடுஞ்சாலையில் மின் விசிறி இயங்கிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் அதிகாரிகளின் இந்த முயற்சியை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளனர்.i
இந்த மின் விசிறிகள் குறித்து வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர் மழையால் நடைபாதைக்கு அடியில் உள்ள அடுக்குகளில் தண்ணீர் கசிந்து, மண் வலுவிழந்துள்ளது. இதனால் சேதமடைந்த பகுதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சாலை பழுதடைந்து இருப்பது குறித்து தங்களுக்கு தெரிவிக்காமல் டோல் கட்டணம் வசூலிப்பதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாலை பழுதாகி இருப்பது தங்களுக்குத் தெரிந்திருந்தால் மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர். சாலை பழுதடைந்து இருப்பது கட்டுமானத்தின் தரம் குறித்தும் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது பழுது ஏற்பட்டிருக்கும் இடத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே பழுதுபார்க்க வேண்டிய நிலை இருந்தது. சமீபத்திய மழையைத் தொடர்ந்து சாலை மீண்டும் சேதம் அடைந்துள்ளது. இதனால் சாலையை பழுதுபார்க்க அச்சாலையை கட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளின் புகாரை தொடர்ந்து டோல் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.