
இந்திய நாட்டின் உயரிய அரசுப் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ஆட்சேர்ப்பை மேற்கொள்ளும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), 2026-ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான தேர்வின் மூலம் 933 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் பங்கேற்க 8 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்வில், பொது அறிவு வினாத்தாள் பலருக்கும் சவாலாக அமைந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், திறனறி தேர்வு பெரும்பாலான தேர்வர்களால் எளிதாக எதிர்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின்படி, 13,343 பேர் முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ள: https://upsconline.nic.in/
தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், முதன்மைத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதிக்கட்டமான நேர்முகத் தேர்வைத் தொடர்ந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசுப் பணிகளுக்கான இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.