ஜெர்மனியைச் சேர்ந்த சர்வதேச முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகன் (Volkswagen), சுமார் 1 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. ஜெர்மனி மீது அமெரிக்கா விதித்துள்ள அதிக வரிகள், மின்சார வாகனங்களுக்கான (EV) தேவை குறைவு மற்றும் முக்கியமாக சீன சந்தையில் எழுந்துள்ள கடும் போட்டி காரணமாக ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான வோக்ஸ்வேகன் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப ஊழியர்களின் எண்ணிக்கையை மறுசீரமைப்பது அவசியமாகிவிட்டதாக ஆடி (Audi), போர்ஷே (Porsche) உள்ளிட்ட 10 பிராண்டுகளை உள்ளடக்கிய இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் உலகளாவிய ஊழியர் படையில் சுமார் 15 சதவீதத்தைப் பாதிக்கும். எனினும் இந்த பணி நீக்க திட்டம் என்பது இந்த தசாப்த ஆண்டு நிறைவுக்குள் படிப்படியாக செய்யப்படும் எனத் தெரிகிறது.
மேலும், ஜெர்மனியில் உள்ள ஹானோவர், எம்டன், ஸ்விகாவ் மற்றும் நெக்கர்சுல்ம் ஆகிய நான்கு முக்கிய ஆலைகளின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் உள்ள ஆலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்படுவது வோக்ஸ்வேகன் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். கடந்த 2009-ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) நிறுவனம் திவாலானதாக அறிவித்தபோது மேற்கொள்ளப்பட்ட 50,000 பணிநீக்கங்களை விட இது இருமடங்கு பெரியது என்பது குறிப்பிடதக்கது.