இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊடக தளங்கள் பயனர்களை தங்களுக்கு அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பிய ஆணையம் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வந்த விசாரணையின் ஆரம்பகட்ட முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. அதில், மெட்டா நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தின் “டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை’ (DSA) மீறியுள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலிகள் பயனர்களின் உடல் மற்றும் மன நலனுக்கு ஏற்படுத்தும் அபாயங்களை மெட்டா நிறுவனம் சரியாக மதிப்பீடு செய்யத் தவறிவிட்டது. சமூக ஊடகப் பயன்பாடு இளைஞர்களின் மனநலனைப் பாதித்து, பதற்றம் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று பல ஆய்வுகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன.
இதன் காரணமாகவே, சமீபத்திய ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, தானாகவே இயங்கும் வீடியோக்கள் (Autoplay videos), தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் (Personalised recommendations) மற்றும் எல்லையே இல்லாத ‘இன்ஃபினிட் ஸ்க்ரோலிங்’ (Infinite scrolling) போன்ற அம்சங்கள் பயனர்களின் மூளையை ஒருவித ‘சுயஇயக்க நிலைக்கு’ (Autopilot mode) தள்ளுகிறது.