அடியோடு மாறும் தமிழ்நாடு.. ரூ.1.02 லட்சம் கோடி மெகா திட்டம்.. ஒவ்வொரு வீட்டிற்கும் குட்நியூஸ் | Tamil Nadu Plans Mega 25,000 MW Integrated Green Energy Park Worth Rs 1.02 Lakh Crore

Spread the love

Tamilnadu

oi-Shyamsundar I

சென்னை: நமது ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசிய தேவையாக இருக்கும் மின் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு பெரிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக மாற்றும் நோக்கில், மாநில பசுமை எரிசக்தி கழகம் (TNGECL) ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. சுமார் 25,000 மெகாவாட் (25 GW) மின் உற்பத்தி திறன் கொண்ட ‘ஒருங்கிணைந்த பசுமை ஆற்றல் பூங்கா’ (Integrated Green Energy Park) ஒன்றை அமைக்க விரிவான திட்ட அறிக்கை (DPR) அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஒட்டுமொத்த முதலீடு சுமார் 1.02 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Nadu tangedco

மாநிலத்தின் வரலாற்றிலேயே மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயம் அல்லாத நிலங்களில் அமைகிறது

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கான இந்த மெகா பூங்கா, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயம் செய்யப்படாத தரிசு நிலங்களில் (Non-Agricultural Lands) அமைக்கப்பட உள்ளது. இந்த பகுதிகளில் சூரிய ஒளி மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், இவை முதன்மை இடங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக சுமார் 1 லட்சம் முதல் 1.25 லட்சம் ஏக்கர் வரையிலான நிலங்கள் பயன்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது. இது விவசாய நிலங்களையோ அல்லது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையோ எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.

பொது-தனியார் பங்களிப்பு (PPP Model)

இந்த பிரம்மாண்ட எரிசக்தி பூங்காவானது ‘பொது-தனியார் பங்களிப்பு’ (Public-Private Partnership – PPP) மாதிரியின் கீழ், ஒரு சிறப்பு நோக்கு நிறுவனம் (SPV) மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான நிலங்கள் முதலீட்டாளர்களுக்கு 30 ஆண்டுகள் வரை நீண்ட கால குத்தகைக்கு விடப்படும். இது முதலீட்டு அபாயங்களைக் குறைத்து, உலகளாவிய நிறுவனங்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்க உதவும். அதே வேளையில், அரசுக்கு நிலையான வருவாயையும் தேடித்தரும்.

ஐந்து ஆண்டு காலத் திட்டம்

மொத்தமுள்ள 25,000 மெகாவாட் இலக்கை எட்ட ஐந்து கட்டங்களாக பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 5,000 மெகாவாட் வீதம் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

முதல் ஆண்டு இலக்கு: முதலாண்டிலேயே 5,000 மெகாவாட் மின் உற்பத்தியை இலக்காகக் கொண்டு நிலங்களை ஒருங்கிணைத்தல், மின்சாரத்தை விநியோகிக்க முதன்மை துணை மின் நிலையங்களை (Pooling Substations) அமைத்தல் போன்ற பணிகள் தொடங்கும்.

அடுத்தடுத்த ஆண்டுகள்: இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் மாநில மற்றும் மத்திய மின் தொகுப்புகளுடன் (Grid Connectivity) இந்த பூங்கா இணைக்கப்படும். நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டுகளில் அதிநவீன மைக்ரோ-கிரிட் தொழில்நுட்பங்கள் மூலம் மின்சாரம் சீராக விநியோகிக்கப்பட்டு, முழு திட்டமும் செயல்பாட்டுக்கு வரும்

ஒற்றைச் சாளர அனுமதி (Single Window Clearance)

இவ்வளவு பெரிய திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த ஏதுவாக, சிப்காட் (SIPCOT) மற்றும் ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ (Guidance Bureau) அமைப்புகள் மூலமாக ஒற்றைச் சாளர முறையில் அனைத்து அனுமதிகளும் உடனுக்குடன் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் அரசு நிலங்களை ஒருங்கிணைப்பதிலும், தனியார் நிறுவனங்கள் தங்களின் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் உள்ள காலதாமதம் முற்றிலும் தவிர்க்கப்படும்.

எதிர்காலப் பயன்கள்

அன்னிய நாட்டு எரிபொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தைப் பாதுகாக்கவும், தொழிற்சாலைகளின் கட்டாயப் பசுமை ஆற்றல் தேவைகளைப் (Renewable Purchase Obligation) பூர்த்தி செய்யவும் இத்திட்டம் உதவும். தமிழ்நாட்டின் தொழில் வளம் பெருகுவதோடு மட்டுமன்றி, தென் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோருக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும் இத்திட்டம் உருவாக்கித் தரும் என மின்சாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *