தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படவுள்ள நிலையில், அதன் டெண்டர் விவகாரம் தீயாய் பரவி த.வெ.க தலைமைக்கு குடைச்சலை கொடுக்கத் தொடங்கியுள்ளது.
மாற்றம் மாற்றம் மாற்றம் என்று ஏறிய ஒவ்வொரு மேடைகளிலும், பிரசாரக் கூட்டங்களிலும், தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த பிறகு மாற்றம் கன்ஃபர்ம் வரும் கான்ஃபிடெண்டா இருங்க என்று சொன்னவர் தற்போதைய முதலமைச்சர் விஜய். ஆனால், ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு, தமிழ்நாட்டு மக்களுக்கு மாற்றம் நிகழ்ந்ததோ இல்லையோ, அரசு திட்டங்கள் பெயர் மாற்றங்கள் மட்டும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தன.
இந்த நிலையில், ஜோதிட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு தலைமைச் செயலகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, தற்போது முதலமைச்சர் அலுவலகம் கோட்டையில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றம் காண உள்ளதே அந்த மாற்றம். மாற்றம் வெறும் ஏமாற்றம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், முதலமைச்சர் அலுவலக மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
என் பக்கம் உன்னை அறிந்தேன், பல சிக்கல் உன்னால் அறிந்தேன் என்று விஜய்யின் பாடல் வரிகளே, ஜோதிட நியமனத்தில் அவருக்கே பொருத்தமாக மாறிய நிலையில், தற்போது அதே ஜோதிடரின் பேச்சைக் கேட்டு முதலமைச்சர் அலுவலகம் மாற்றப்படுவது தலைமைக்கு மேலும் சிக்கலை கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், அலுவலகம் மாற்றினால் சிக்கல்கள் வராது என்ற ஜோதிடர் வழங்கிய ஆலோசனையின் பேரில் முதலமைச்சர் அலுவலகம் மாற்றப்படுவதாகக் கூறப்படும் நிலையில், அந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் அலுவலகம் மாற்றுவதிலேயே சிக்கல் உருவாகியுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே சென்னை ஜார்ஜ் கோட்டை தமிழ்நாட்டின் பவர் செண்டராக இருந்து வருகிறது. இத்தகையச் சூழலில், தான் தான் ஒன் அண்ட் ஒன்லி பவர் செண்டர் என்று கூறியுள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் பவர் செண்டரான தலைமைச் செயலகத்தை விடுத்து நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு குடியேற உள்ளார். இந்த செண்டரின் டெண்டரில் தான் சிக்கலே உருவாகியுள்ளது.
அதாவது, இந்த அலுவலக மாற்றத்திற்கான மதிப்பீடு சுமார் 3 கோடிக்கான திட்டத்தை எந்தவொரு டெண்டரும் விடாமல் தனியார் நிறுவனத்திடம் வழங்கியதாக கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
முதலமச்சரை அசத்துவதற்காக புதிய அலுவலகம் எலைட்’ லுக்கில் இருக்க வேண்டும் என மெனக்கெடுகிறதாம் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட அவரது நிழல் வட்டாரம். அதற்கேற்ப ஓமந்தூரார் சட்டமன்றத்தை அரசு மருத்துவமனையாக மாற்றிய பழைய நிறுவனத்திடமே மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான பணி, எந்த டெண்டரும் விடாமலேயே நேரடியாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம். இதையடுத்து, டெண்டர் விதிமுறைகளை முதலமைச்சர் அலுவலகமே மீறுவதா என எதிர்க்கட்சிகள் இதை பிரச்னையாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசின் கஜானா காலியாக உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் “ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்விட் செய்யாதீங்க” கூறியதை இப்பொழுது அவரிடமே எதிர்க்கட்சிகளும், நெட்டிசன்களும் விமர்சித்து வருகிறார்கள்.

