
தனியார் செய்தி ஊடகத்திற்கு அண்மையில் பேட்டி அளித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தலுக்கு முன்பாக அதிமுக சார்பில் தவெக தலைவர் விஜயிடம் ஆதரவு கோரப்பட்டதாகக் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க விஜயின் ஆதரவைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அதற்கு விஜய் சம்மதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக டிடிவி தினகரன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
2026 தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையைப் பெறவில்லை. இதையடுத்து, திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்தது.
இதனை விமர்சித்த டிடிவி தினகரன், திமுகவை ‘தீய சக்தி’ என விமர்சித்துவிட்டு, அதே கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளின் ஆதரவைப் பெற்று தவெக ஆட்சி அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், பாஜக ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகிவிடும் என்ற அச்சத்தால் அதிமுக ஆட்சி அமைவதை கம்யூனிஸ்ட் கட்சிகள் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
டிடிவி தினகரனின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.