கோவை விமானநிலையத்தில் அ.தி.மு.க. எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகவும் கூட்டணி சேர்ந்துள்ளோம்.
தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண், மகளிர் உரிமை தொகை போன்ற திட்டங்களை தொடர்ந்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றி. பெண்கள் பாதுகாப்பிற்காக அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் திட்டத்தினை வரவேற்கிறோம். அதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நல்ல ஆட்சி மலரும் என எதிர்பார்க்கிறோம். முதல்வர் விஜய் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த, பதவி ஏற்பு விழாவின் போது டைம் கேட்டுள்ளார். பள்ளி, கல்லூரி, வழிபாட்டுதலங்கள் அருகேயுள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது பெரிய மகிழ்ச்சி. எடுத்துகாட்டாக புதிய அரசு செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
`அ.தி.மு.க-வில் உங்களால் தான் பிளவு ஏற்பட்டது’ என விமர்சனம் எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு, “அப்படி யெல்லாம் இல்லை. நாங்கள் அ.தி.மு.க-வை ஒன்று சேர்க்கத்தான் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் ஒன்று சேர்ந்துவிடுவோம். நாங்கள் கூட்டணிக்கு சப்போர்ட் தான் பண்ணியுள்ளோம்” என பதிலளித்தார்.