திமுக இந்த களத்தில் முன்கூட்டியே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அதிமுகவும் அதே பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. “2K ADMK” என்ற தலைப்பில் கோவையில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சி, இளைஞர்களை கட்சியுடன் இணைக்கும் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. இளம் தலைமுறையினருக்கு கட்சியில் அதிக பொறுப்புகளை வழங்குவது, அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் எதிர்கால தலைமுறையை உருவாக்குவது போன்ற நோக்கங்களுடன் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இளைஞர்களை மையப்படுத்திய இந்த அரசியல் போட்டி வெளிப்படையாக ஆரோக்கியமான மாற்றமாக தோன்றினாலும், இதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் குறித்து விமர்சகர்கள் வேறொரு கருத்தை முன்வைக்கின்றனர்.
தவெகவின் வெற்றியை வெறும் இளைஞர்களின் ஆதரவாக மட்டுமே பார்க்க முடியாது என்பதே அவர்களது வாதம். ஆறு தசாப்தங்களாக தமிழக அரசியலை ஆட்சி செய்துவரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அரசியல் சக்தியை மக்கள் தேடியதன் வெளிப்பாடே அந்த தேர்தல் முடிவு என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“இளைஞர்கள் ஆதரித்ததால் தவெக வென்றது” என்ற ஒற்றை விளக்கத்திற்குள் தேர்தல் முடிவை அடக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, “ஏன் மக்கள் மாற்றத்தை விரும்பினர்?” என்ற அடிப்படை கேள்விக்கான பதிலை தேடுவதுதான் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அவசியம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
GenZ DMK, 2K ADMK போன்ற புதிய முயற்சிகள் கட்சிகளுக்கு இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க உதவலாம். ஆனால், இளைஞர்களை மேடைகளில் அமர்த்துவது மட்டுமல்லாமல், அவர்களின் கருத்துகளுக்கு கட்சிக்குள் இடம் கொடுத்து, முடிவெடுக்கும் அமைப்புகளில் பங்கேற்க வைப்பதுதான் உண்மையான மாற்றமாக இருக்கும் என்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.