ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் படுதோல்வி அடைந்தது. போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில், குஜராத் அணியின் வீரர் கிளென் பிலிப்ஸ் கலந்துகொண்டார். அன்றைய போட்டியில் ஆடும் லெவனில் கூட இல்லாத அவர் செய்தியாளர் சந்திப்பில் அணி சார்பாக கலந்துகொண்டது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, பிலிப்ஸ் காட்டிய கோபம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு மோசமான கேள்வி!
“ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 254 ரன்கள் குவித்தபோதே, குஜராத் அணி மனதளவில் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டதா?” என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த பிலிப்ஸ், உடனடியாக காட்டமான பதிலைக் கொடுத்தார்.
“அது ஒரு முட்டாள்தனமான கேள்வி. உண்மையிலேயே மிக மிக முட்டாள்தனமான கேள்வி. “சரி, இந்தப் போட்டியை நாம் கைவிட்டுவிடலாம்’ என்று நினைத்துக்கொண்டு எந்த வீரரும் களத்திற்குள் செல்வதில்லை. தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இது ஒரு மிக மோசமான கேள்வி. நாங்கள் களத்திற்குச் சென்று எங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தினோம். துரதிர்ஷ்டவசமாக, 250 ரன்களைத் துரத்தும்போது எல்லாம் சரியாக அமைய வேண்டும். ஆனால் எங்களுக்கு அப்படி அமையவில்லை,” என்று சீறினார்.