அடுத்துவந்த தி.மு.க ஆட்சியில், உதயநிதி ஸ்டாலினுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொண்டார் அந்த தொழிலதிபர். டெல்லியில், அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுடனும் நட்பை உருவாக்கிக் கொண்டவர், அமித் ஷாவின் குட் புக்கிலும் இடம்பெற்றார். இந்தத் தொடர்புகள் அவரை பவர் சென்டராக உருவாக்கியது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடியின் நெருங்கிய உறவுகள் மீது வருமானவரித்துறை சோதனைகளை ஏவியது டெல்லி. அந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க, தன்னுடைய மகன் மிதுன் ரூட்டில் அந்த தொழிலதிபரை கையில் எடுத்தார் எடப்பாடி. இருவரும் நெருக்கமானார்கள். அந்த தொழிலதிபரின் சிபாரிசில், வருமானவரித்துறை சங்கடங்களெல்லாம் தீர்ந்தன. பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பாக டெல்லியில் அமித் ஷாவை எடப்பாடி சந்தித்தபோது, இருவருக்கும் இடையே மொழிப்பெயர்ப்பாளராக இருந்தவர் அந்த கட்டிட தொழிலதிபர்தான். இப்படி ஆல் இன் ஆலாக வலம் வந்த தொழிலதிபர்தான், இப்போதைய அ.தி.மு.க குழப்பத்திற்கும் வித்திட்டுள்ளார்.

2026 தேர்தல் ரிசல்ட் வெளியான சமயத்தில், த.வெ.க-வை ஆட்சியமைக்கவிடாமல் தடுப்பதற்கு கடுமையாக முயற்சித்தார் உதயநிதி. அ.தி.மு.க-வுக்கு வெளியிலிருந்து தி.மு.க ஆதரவளித்து, எடப்பாடியை முதல்வராக்கும் திட்டத்தையும் முன்வைத்தார். அந்தத் திட்டத்தை எடப்பாடியிடம் சொல்லி, அவரது மனதைக் கரைத்தவர் அந்த கட்டிட தொழிலதிபர்தான். இந்தத் திட்டத்தை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் எடப்பாடி சொன்னபோதுதான் பிரச்னையும் வெடித்தது. “அந்த தொழிலதிபரோட சேர்ந்து ரொம்பவும் மாறிட்டீங்க. உங்களைக் கெடுத்தது பத்தாதுனு, கட்சியையும் நாசம் பண்ண ரெடியாகிட்டாரு. அவர் திட்டத்தைக் கேட்டு தி.மு.க-வோட கூட்டணி அமைச்சா, நம்ம கட்சியே காணாமல் போய்டும்’ என்று சி.வி.சண்முகம் ஓப்பனாக வெடிக்க, கூட்டத்தில் அனல் பறந்தது.