‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அன்பே டயானா’. இந்தப் படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
‘குட் நைட்’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் நாளை (ஜூலை.17) திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
அப்போது பேசிய பாரி இளவழகன், “எனது பயணம் ‘ஜமா’ படத்தில் தொடங்கியது இல்லை. 2013-ல் நடிப்பிற்கான வகுப்பில் சேர்ந்ததில் இருந்து எனது பயணம் தொடங்கியது.
இந்தப் பயணம் எனக்கு மிகவும் கடினமாகத் தான் இருந்தது. சின்ன சின்னக் கதாபாத்திரங்கள் செய்துதான் இந்த இடத்திற்கு வந்தேன். ‘ஜமா’ படம் வந்தபோது திரையரங்கில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
ஆனால் ‘அன்பே டயானா’ முழுக்க முழுக்க திரையரங்கிற்காக எடுக்கப்பட்ட படம் தான்.

இந்தப் படத்திற்கு கிடைக்கும் வெற்றி எனக்கு மட்டும் கிடைக்கும் ஒரு வெற்றியாக இருக்காது.
என்னை மாதிரி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிற உதவி இயக்குநர்களுக்கும், இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்குமான வெற்றியாக இருக்கும்” என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.