சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூலை 16) நடைபெற்ற நிலையில், அதன்பிறகு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சரான நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பாஜகவுடன் தங்கள் கட்சிகளை இணைத்து, தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சரவையில் சீட் வாங்கிக் கொள்ளும் முடிவுக்கு வரலாம் என்றும், அவர்களுக்கு கட்சியை நடத்தும் எண்ணமோ, காப்பாற்றும் எண்ணமோ இல்லை இல்லை என்றும் கூறினார். மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி அடமானம் வைத்துவிட்டு, இப்போது என்ன செய்வது எனத் தெரியாமல் இருக்கிறார் என்று கூறிய அமைச்சர் நிர்மல் குமார், ஒரு கட்சி, ஒரு கட்சி அலுவலகம், ஒரு லெட்டர் பேட் மட்டும் இருந்தால் போதும் என்று தனது காலத்தை தள்ளக்கூடிய இடத்துக்கு எடப்பாடி வந்துவிட்டார் என்று விமர்சித்தார்.
தொடர்ந்து திமுக குறித்து பேசிய அவர், ஸ்டாலினும் அடுத்து என்ன செய்வது? அடுத்து கட்சியை யாரிடம் கொடுப்பது? எனத் தெரியாமல் நிற்கிறார் என்றும், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை 50 கோடிக்கு விலைக்கு வாங்க இன்னும் முயற்சி செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், தவெக அரசை செயலிழக்கச் செய்ய வேண்டும் என குறுக்கு வழிகளை பின்பற்றி வருகிறார்கள் என்று கூறிய அமைச்சர், பழனி கோயில் நில விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், அந்த நில மோசடிக்கு அரசு எந்த விதத்திலும் துணை போகவில்லை என்றும் தெளிவுப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சரான மூர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் நிர்மல்குமார், திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் முன்பு அமைச்சராக இருந்த மூர்த்தி ‘மினிஸ்டர் கட்டிங்’ என பணம் வாங்கினார் என்றும், ஒவ்வொரு அலுவலகத்திலும் 2 ஆள் போட்டு ‘மினிஸ்டர் கட்டிங்’ என தொகையை வசூலித்தார் என்றும் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதோடு, கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவு 9 மணி வரை நடைபெற்ற பத்திரப்பதிவு நடைமுறைகள், தற்போது முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், இனி பத்திரப்பதிவு முறையில் முறைகேடு அல்லது ஊழலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் எச்சரித்தார்.


