இரண்டு பரிசோதனைகளும் தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்டது. உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, இரண்டு நர்சிங் அதிகாரிகள் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் யார் பொறுப்பு என்று கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர்கள் சிகிச்சையில் எந்த வித தவறும் செய்யவில்லை,” என்று அவர் கூறினார்.
கல்பனா மிஸ்ரா இறப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, தனது குழந்தையைப் பெற்றெடுத்த சிறிது நேரத்திலேயே, தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி தனது குடும்பத்தினரிடம் கெஞ்சினார்.
“அப்பா இதுபோன்ற சிகிச்சை தொடர்ந்தால், இவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்” என்று தனது தந்தையிடம் கல்பனா கெஞ்சிய வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் “நான் பிழைக்க மாட்டேன், தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள், என் உயிருக்கு ஆபத்து உள்ளது” என்று கல்பனா கூறுகிறார்.
கல்பனா இறப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு அவர் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகத் தோன்றுகிறது. கல்பனா தனது உறவினர்களிடம் செல்ல முயன்றார். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை வெளியேற விடாமல் தடுக்க முயற்சித்தனர். ஆனாலும் திரும்பத் திரும்ப தனது உறவினர்களிடம் செல்ல கல்பனா முயற்சி செய்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் கல்பனா இறந்து போனார்.