ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, தவெக அமைச்சரவையில் முதல்முறையாக பெரிய மாற்றத்தைச் செய்ய முதலமைச்சர் விஜய் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்தவகையில், காங்கிரஸைச் சேர்ந்த ஒரு அமைச்சர் உட்பட, தற்போதைய அமைச்சர்கள் 4 பேர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், குறைந்தது 3 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும் கோட்டை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கூறப்படுபவர்களுக்கு மாற்றாக, மாற்றுக் கட்சியில் இருந்து தவெகவில் ஐக்கியமானவர்களுக்கு இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்றால் அமைச்சரவையில் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் சீனியர் மோஸ்ட் ரத்தத்தின் ரத்தங்களுக்கே முன்னுரிமை என்று கூறப்படுவதால், விஜய் ரசிகர் மன்றம் தொடங்கி கட்சி அமைத்து ஆட்சி பிடித்த்து வரை விஜய்க்காகவே உழைத்தவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் உள்விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செயல்திறன் அறிக்கையை தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் தயாரித்துள்ளதாகவும், இந்த ரகசிய செயல்திறன் தணிக்கை அறிக்கையின் அடிப்படையிலேயே இப்படி அமைச்சரவயில் தடாலடியான மாற்றங்கள் நிகழ உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதாவது இந்த செயல்திறன் அறிக்கையானது அமைச்சர்களின் செயல்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்து வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கையின் அடிப்படையில் உயர்கல்வித்துறை அமைச்சரான பி. விஸ்வநாதன், போக்குவரத்துறை அமைச்சர் ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கே. ஜெகதீஸ்வரி, மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் டி. சரத்குமார் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியை இழக்க நேரிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பி. விஸ்வநாதன் மற்றும் ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் ஆகிய இருவரை பொறுத்தவரை பலமுறை முதலமைச்சர் விஜய் எச்சரித்து பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் பொதுவெளி நடத்தை சார்ந்த புகார்கள் இவர்கள் மீது குவிந்துக் கொண்டே இருக்கிறதாம். சமூக நலத்துறை அமைச்சர் கே. ஜெகதீஸ்வரி மீது, அவரது கட்சித் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், குற்றப் பின்னணி கொண்டவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார் மீது போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அரசின் நற்பெயருக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த முடிவை முதலமைச்சர் விஜய் எடுத்துள்ளதாக தகவல்கள் லீக்காகியுள்ளன.

