சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 164 டீசல் பேருந்துகள், 136 சிஎன்ஜி பேருந்துகள் உள்பட 300 புதிய அரசுப் பேருந்துகள் வாங்கப்பட்டன. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று தொடங்கிவைத்தார்.
இதன்பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூர் செல்லும் 29ஏ பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துனருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். பின்னர் அந்த பேருந்தில் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். நடத்துனரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துக்கொண்டார். நடத்துனரை தனது இருக்கைக்கு அருகே அமர்த்தி அவருடன் பேசிக்கொண்டே பயணித்தார்.
அதுமட்டுமன்றி பேருந்தில் பயணித்தபோது தனது போனில் விடியோ எடுத்தார்பேருந்தை ஒட்டிய ஓட்டுநர் மற்றும் வழியில் நின்றவர்களை அவர் விடியோ எடுத்தார். தலைமைச் செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை சென்ற முதல்வர், அந்த பேருந்தில் மீண்டும் தலைமைச் செயலகம் திரும்பினார்.
தமிழ்நாடு அரசால் இயக்கப்படும் பேருந்துகளில் ‘அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். அதில், தமிழ்நாடு என்ற பெயரைச் சேர்த்து ’தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என பேருந்துகளின் கண்ணாடியில் அச்சிடுமாறு, கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடதக்கது.



