"அவர்களுக்கு அடிமைகள்தாம் தேவை" – உத்தவ் கட்சியிலிருந்து விலகியது குறித்து MPக்கள் சொல்வது என்ன?

Spread the love

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து 6 எம்.பி.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்குத் தாவுவதாக அறிவித்திருந்தனர்.

இதற்காக அவர்கள் முதலில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு முறைப்படி கடிதம் கொடுத்து தங்களை தனி அணியாக அங்கீகரிக்கும்படி கோரி இருந்தனர். அதன் பிறகு அவர்கள் நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் முறைப்படி தங்களை ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவில் இணைத்துக்கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, ”விலகிச் சென்றவர்களைத் திட்டுவதற்குப் பதிலாகத் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

உத்தவ் தரப்பினர் மனரீதியான கோளாறு கொண்டவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசேனாவில் இணைந்த நிகழ்வானது சட்டரீதியான, அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டது.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

அந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த தேர்தலில் சிவசேனா கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

மக்களவை சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட கடிதத்தில் ஏழாவது நாடாளுமன்ற உறுப்பினரும் கையெழுத்திட்டிருந்ததாகவும், அவரும் ஷிண்டேவின் சேனா அணியில் இணையவிருக்கும் நிலையில் உள்ளார் என்றும் சேனா நிர்வாகி ராம்தாஸ் கதம் கூறினார்.

ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவில் சேர்ந்த மக்களவை எம்.பி. சஞ்சய் தினா பாட்டீல், உத்தவ் கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து கூறுகையில், ”சிவசேனாவை (உத்தவ்) விட்டுச் செல்வதற்குக் காரணம் அந்த கட்சியில் தனக்கு ஒருவருடன் மட்டுமே பிரச்னை இருந்தது”என்று குறிப்பிட்டார்.

ஆனால் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. ஞாயிற்றுக்கிழமை தனது தொகுதியில் உள்ள பாண்டுப்பில் உத்தவ் நடத்திய பேரணிக்குப் பதிலளித்த பாட்டீல், “அவர் முன்னதாக வந்திருந்தால் இப்போது வர வேண்டிய அவசியமில்லை. என்னை அழைத்திருந்தால் நான் மாதோஸ்ரீக்குச் சென்றிருப்பேன். ஆனால் அவர்கள் எங்களை விரும்பவில்லை, அவர்களுக்கு அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் தேவையில்லை. அவர்களுக்கு அடிமைகள் மட்டுமே தேவை,” என்று கூறினார்.

முன்னதாக உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி இருந்தார். இந்தக் கூட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு சட்டமேலவை உறுப்பினர் பங்கேற்கவில்லை. அவர்கள் நான்கு பேரும் கட்சித் தலைமைக்குத் தாங்கள் வரமுடியாமல் போனதற்கான காரணம் குறித்து தெரிவித்தனர் என்று கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

மேலும் கட்சிக்கு எதிராகத் திரும்பிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள உத்தவ் தாக்கரே, ஞாயிற்றுக்கிழமையன்று வடகிழக்கு மும்பையின் பாண்டூப் மற்றும் காஞ்சூர்மார்க் பகுதிகளில் உள்ள கிளை அலுவலகங்களைப் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, யவத்மால், ஹிங்கோலி, பர்பானி, தாராஷிவ் மற்றும் ஷிர்டி ஆகிய இடங்களிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *