மர்மம் நிறைந்த சப்பமடம்:
இங்குள்ள சப்பமடம் பகுதி பல வரலாற்றுச் சுவடுகளை தன்னுள் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் “சர்ப்பமடம்” என்று அழைக்கப்பட்ட இந்த இடம், பாம்புகள் அதிகம் காணப்பட்டதால் அந்தப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் “சப்பரம்” என்ற சொல்லிலிருந்து “சப்பமடம்” என மருவியதாகவும் கருத்துகள் உள்ளன.
ஆனால், அங்குள்ள சிற்பங்கள் மற்றும் கட்டட அமைப்புகளை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர்கள், இது திருச்செந்தூர் செல்லும் பயணிகளுக்காக பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட சத்திரம் எனக் கருதுகின்றனர். மேலும் இதனை “சுந்தரதோழார் சத்திரம்” என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஆய்வின்றி அழியும் வரலாற்றுச் சின்னங்கள்:
முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததே இவ்வாறான குழப்பங்களுக்கு காரணம் என வரலாற்று ஆர்வலர் கிறிஸ்து ஞான வள்ளுவன் குறிப்பிடுகிறார். மேலும், சரியான பாதுகாப்பு இல்லாததால் இந்த வரலாற்றுச் சின்னங்கள் இன்று அழிவின் விளிம்பில் இருப்பதையும் அவர் வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறார்.
தம்பி ஐயா பெர்னாந்து, கிறிஸ்து ஞான வள்ளுவன் போன்ற பல வரலாற்று ஆர்வலர்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டிருந்தாலும், இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இன்னும் பாதுகாப்பின்றி இருப்பது, நம் பெருமைமிக்க வரலாற்றை நாமே மெதுவாக அழித்து வருவதற்குச் சமமாகும்.
நம் முன்னோர்களின் அடையாளங்களையும் வரலாற்றுச் சுவடுகளையும் அழிவின் விளிம்பிலிருந்து நாம் பாதுகாக்கவேண்டியது அவசியம்.
– தர்ஷினி.சி