மேலும், சென்னை பெருநகரில் தினசரி ஆவின் பால் விற்பனை சுமார் 16.5 லட்சம் லிட்டருக்கு மேல் இருந்த நிலையில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 25 சதவிகிதத்திற்கும் மேல் பால் விநியோகம் குறைக்கப்பட்ட சூழலில் தற்போது மேலும் 10 சதவிகிதம் வரை விநியோகத்தைக் குறைக்க மீண்டும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 15.09.2026 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியாளர்கள் ஆவினை வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்தி வந்த நிலையில் ஜோசப் விஜய்யாவது மாற்றத்தைக் கொண்டு வந்து ஆவினை மீட்டெடுப்பார் எனப் பல்வேறு ஆலோசனைகளை பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமியைச் சந்தித்து அதற்கான தரவுகளை அளித்து பேசியும், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பியும் எந்த முயற்சியும் இதுவரை முன்னெடுக்கவில்லை.
4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆவினுக்கான பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 6 வரை உயர்த்தப்பட்ட நிலையில் பல்லாயிரம் கோடி ருபாய் நிதி இழப்பு ஆவினை முடக்கி விடாது. அதேநரம், மாநில அரசின் நிதி பங்களிப்போடு செயல்படும் கூட்டுறவு நிறுவனம் என்பதால் அந்த இழப்பு பொதுமக்கள் தலையில் வேறு வகையில் திணிக்கப்படும்.
ஆனால், தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கினாலும், அதற்கேற்ப விற்பனை விலையை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது.
ஆவின் மற்றும் தனியார் பாலுக்குமான விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 19 முதல் 24 வரை வித்தியாசம் உள்ள நிலையில் தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலை மேலும் உயர்த்தப்படும்பட்சத்தில், விலை குறைவாக உள்ள ஆவினை நோக்கி பொதுமக்கள் திரும்பும் நிலை ஏற்படும். ஏற்கனவே கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் கூடுதல் தட்டுப்பாடு ஏற்பட்டு புதிய அரசுக்கு அவப்பெயரே பரிசாகக் கிடைக்கும்.
எனவே, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் காப்பற்றப்பட வேண்டும், பொதுமக்களுக்குத் தங்குதடையற்ற பால் விநியோகம் தொடர வேண்டும் என்றால் பால் கொள்முதல் விலை உயர்விற்கேற்ற விற்பனை விலையை உடனடியாக மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதை விட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதால் ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தாமல் காலம் தாழ்த்துவது என்பது பொதுமக்கள் மத்தியில் தவெக அரசுக்கு மேலும், மேலும் அவப்பெயரையே ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.