India
-Nantha Kumar R
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே எல்லை பகுதியில் டீக்கடை நடத்தி வந்த 26 வயது இளைஞர் ஒருவர், எல்லையோர பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவனத்தினரை உளவுப்பார்த்து முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு பகிர்ந்த நிலையில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ எனும் உளவு அமைப்பு உள்ளது. இது பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு பிரிவாகும். இதன் தலைமையிடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ளது. இந்த உளவு அமைப்பினர் நம் நாட்டின் ராணுவத்தினரின் செயல்பாட்டை உளவு பார்க்க துடித்து வருகின்றனர்.
இதற்காக சிலரை உளவாளிகளாக வைத்துள்ளனர். இந்த உளவாளிகளை போலீசார் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு படையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் 26 வயது நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநில சிஐடி உளவுப்பிரிவு போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். கைதானவரின் பெயர் பெயர் முஸ்தாக் அலி. வயது 26. இவர் ராஜஸ்தான் மாநிலம் நாச்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரியா கிராமத்தின் ஹிகோலா கி தானி பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
இவர் சமூக வலைதளங்கள் வழியாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பை சேர்ந்த ஏஜெண்டுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்காக உளவு தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கி இருப்பது அவரது செல்போன் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் ஜெய்சல்மார் அருகே எல்லைக்கு செல்லும் சாலையில் டீக்கடைஅமைத்து பிஎஸ்எஃப் எனும் எல்லை பாதுகாப்பு படை மற்றும் இந்திய ராணுவ வீரர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வீடியோ, போட்டோ எடுத்து உளவு தகவலாக வழங்கி உள்ளார். இதற்கு கைமாறாக அவர் பணம் பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநில உளவுத்துறை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் (ADG) பிரஃபுல் குமார் கூறுகையில்,”மாநிலத்தில் சந்தேகத்திற்கிடமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வுருகின்றனர். அந்த வகையில் தற்போது முஸ்தாக் அலி கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார். கைதானவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.