இன்று (ஜூன் 30, 2026) முதல் கர்நாடகாவில் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குகிறது.
இந்தச் சிறப்பு தீவிர திருத்தம் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து கர்நாடகா அமைச்சரவை சில அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளது.
அவை என்னென்ன என்பதை தனது எக்ஸ் தளத்தில் பட்டியலிட்டிருக்கிறார் கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே.
“வாக்காளர் பட்டியலில் வெளிப்படையான, ஆதாரங்களின் அடிப்படையிலான திருத்தங்கள் செய்வதை கர்நாடக அமைச்சரவை ஆதரிக்கிறது.

ஆனால், தற்போதைய ‘எஸ்.ஐ.ஆர்’ கட்டமைப்பில் உள்ள வெளிப்படைத்தன்மையற்ற தன்மை, தன்னிச்சையான போக்கு மற்றும் வாக்காளர் உரிமை பறிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துப் பலத்த கவலைகளை எழுப்பியுள்ளது.
கர்நாடகாவில் எல்.ஐ.ஆர் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, இந்தியத் தேர்தல் ஆணையம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது:
1. எஸ்.ஐ.ஆர் செயல்முறையின் சட்டபூர்வ அடிப்படை, வாக்காளர் பெயர் நீக்கத்திற்கான அளவுகோல்கள், கண்காணிப்பு அமைப்பு, மென்பொருள் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒரு முழுமையான சுயாதீன ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
2. பி.எல்.ஓ-க்கள் (BLO) மற்றும் நிர்வாகத்திற்குத் தேவையில்லாத பணிச்சுமை ஏற்படுவதைத் தவிர்க்க, கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவைக் குறைந்தபட்சம் மூன்று மாதங்களாக நீட்டிக்க வேண்டும்.
3. லாஜிக்கல் முரண்பாடுகள், அல்காரிதம்கள்/மென்பொருள் தர்க்கம், நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், பொறுப்பான அதிகாரிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து முரண்பாடுகளுக்கான அளவுகோல்களையும் விளக்கும் விரிவான கையேட்டை வெளியிட வேண்டும்.
4. பி.எல்.ஓ-க்களின் கள சரிபார்ப்புக்கு முன்பு எந்தவொரு வாக்காளரையும் கேள்விக்குள்ளாக்கவோ அல்லது நோட்டீஸ் அனுப்பவோ கூடாது. மேலும், சிறிய எழுத்துப்பிழைகள், குமாஸ்தா தவறுகள் அல்லது மொழிபெயர்ப்புப் பிழைகளை ஆட்சேபனைக்கான காரணங்களாகக் கருதக் கூடாது.

5. தற்போதைய வாக்காளர் எவரையும் முன்னறிவிப்பு, பாரபட்சமற்ற அதிகாரியின் முன்னிலையிலான விசாரணை மற்றும் எழுத்துப்பூர்வ உத்தரவு இல்லாமல் நீக்கக் கூடாது என உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
6. ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் முழுமையான பட்டியலைத் தெளிவுபடுத்த வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் போன்றவற்றை விலக்கி வைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொருந்தக்கூடிய இடங்களில் கர்நாடகாவின் ‘குடும்பா ஐடி’-யை (Kutumba ID) அங்கீகரிக்க வேண்டும் மற்றும் தங்களை நிரூபிக்க வேண்டிய சுமையைச் சாதாரண குடிமக்கள் மீது அநியாயமாகச் சுமத்தக் கூடாது.
7. சரியான ஃபார்ம்-6, ஃபார்ம்-7 ஆட்சேபனைகளுடன் சேர்த்துச் செயலாக்க வேண்டும். மேலும், மொத்தமாகப் பெயர்களை நீக்க வழிவகுக்கும் ‘பல்க்’ ஆட்சேபனைகளைத் (bulk objections) தடுக்க வேண்டும்.
8. நோட்டீஸ்கள், சேர்க்கைகள், நீக்கங்கள் மற்றும் உத்தரவுகள் குறித்த கணினியால் படிக்கக்கூடிய தினசரி தரவுகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
9. வெளிப்படைத்தன்மையற்ற செயற்கை நுண்ணறிவு கருவிகள் எதுவும் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், தரவுப் பதிவு, டிஜிட்டல் மயமாக்கல், வரைபடமாக்கல் மற்றும் சரிபார்ப்புக்கான அனைத்து மென்பொருள்களையும் பொதுவெளியில் வெளிப்படுத்தி, அவற்றைச் சுயாதீன சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
The Karnataka Cabinet supports transparent, evidence-based revision of electoral rolls, but has raised serious concerns about opacity, arbitrariness and possible disenfranchisement in the current SIR framework.
The Cabinet resolved that before SIR is implemented in Karnataka,…
— Priyank Kharge / ಪ್ರಿಯಾಂಕ್ ಖರ್ಗೆ (@PriyankKharge) June 30, 2026
10. தேர்தல் பதிவு அதிகாரிகள் தங்களின் சட்டப்பூர்வ கடமைகளைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், சிறப்புப் பட்டியல் பார்வையாளர்கள் மற்றும் மைக்ரோ பார்வையாளர்களின் பங்களிப்பைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்.
11. பெண்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சேரி வாசிகள், நாடோடி மற்றும் பழங்குடியினர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் திருநங்கைகளுக்குச் சிறப்புப் பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலைத் திருத்துவதைத்தான் கர்நாடகா ஆதரிக்கிறது. அதைச் சீர்குலைப்பதை அல்ல என்பதை அமைச்சரவை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதற்குத் தேர்தல் ஆணையம் இன்னும் பதிலளிக்கவில்லை.”