இஸ்லாமிய நேட்டோவில் ஐக்கியமாகும் வங்கதேசம்? உற்று கவனிக்கும் இந்தியா! இது பெரிய சிக்கலாச்சே | Bangladesh Wants to Join Islamic NATO Pact With Saudi, Turkey and Pakistan, What it means for India

Spread the love

International

oi-Vigneshkumar

டாக்கா: சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே சமீபத்தில் கையெழுத்தான மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய வங்கதேசம் ஆர்வம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த கூட்டணியில் இணைந்தாலும், பிற நாடுகளுடனான தனது உறவுகளையோ, வெளியுறவு கொள்கையையோ மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், துருக்கி, சவுதி ஆகிய நாடுகள் இணைந்து இப்போது ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. மற்ற இஸ்லாமிய நாடுகளையும் இதில் இணைத்து கிட்டத்தட்ட இஸ்லாமிய நேட்டோ போன்ற ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன.

Bangladesh Islamic NATO Pakistan saudi Arabia

வங்கதேசம்

இந்தச் சூழலில் தான் இதில் வங்கதேசமும் இணைய ஆர்வம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபிய தூதரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேச வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஹுமாயூன் கோபிர், “மெக்கா ஒப்பந்தம் வங்கதேசத்துக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய தனித்துவமான ஒப்பந்தம். இப்போது தான் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளோம். எல்லாம் சுமுகமாகவே நடக்கிறது. இது வரும் காலத்தில் எப்படி போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார்.

சர்வதேச அரசியல் சூழல் வேகமாக மாறி வரும் நிலையில், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கையாள வேண்டியுள்ளதாகவும் கோபிர் கூறினார். அதேநேரம் ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு கூட்டணியில் இணைவது, மற்ற கூட்டணிகள் அல்லது நாடுகளுடன் இணைந்து செயல்படுவதை எந்த விதத்திலும் தடுக்காது என்றும் அவர் விளக்கினார்.

இணைய வாய்ப்பு அதிகம்

முன்னதாக வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் கலிலுர் ரஹ்மானும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதே நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். மெக்கா ஒப்பந்தத்தை வங்கதேசம் சாதகமாக பார்ப்பதாகவும், இது முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான விவகாரம் என்றும் அவர் கூறினார். தற்போது வங்கதேசத்துக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை என்றாலும் அழைப்பு வந்தால் அதை நிச்சயம் பரிசீலிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மெக்காவில் நடைபெற்ற உச்சி மாநாட்டை தொடர்ந்து பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், மூன்று நாடுகளுக்கும் இடையிலான கூட்டு பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவதாகும். அதன்படி, ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மற்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதலாகவும் கருதப்படும்.. மற்ற நாடுகளும் ஆதரவாக வளத்தில் இறங்கும். இதுவே இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சமாகும்.

இந்தியா

வங்கதேசம் இந்த கூட்டணியில் இணைய விரும்புவது இந்தியாவை கவனிக்க வைத்திருக்கிறது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தியாவின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

வங்கதேசத்தின் வரலாற்றை பார்த்தால்.. அது கடந்த காலங்களில் எப்போதும் எந்தவொரு ராணுவ கூட்டணியிலும் சேராமல், அணிசேரா வெளியுறவு கொள்கையை பின்பற்றி வந்துள்ளது. எனவே, மெக்கா ஒப்பந்தத்தில் இணைவது அந்த நீண்டகால கொள்கையில் மாற்றத்தைக் குறிக்கலாம் என்று வெளியுறவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

சாதக- பாதகம்

பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஏற்கனவே பல்வேறு பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. வங்கதேசம் இதில் இணைந்தால் எதிர்காலத்தில் தேவையற்ற ராணுவ மோதல்களில் சிக்கக்கூடும். அதாவது சவுதி மீது அமீரகம் தாக்குதல் நடத்தினால்.. வங்கதேசமும் அதில் இணைய வேண்டும். சவுதிக்கு ஆதரவாக வங்கதேசம் மீது தாக்குதல் நடத்த வேண்டும். இது வங்கதேசத்தின் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால்.. அதை முதலில் வங்கதேசம் மதிப்பிட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதேநேரத்தில் ஒப்பந்தத்தில் இணைவது வங்கதேசத்துக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் சர்வதேச அளவில் வலிமையை தரும் என்று ஆதரவாளர்கள் கருதுகின்றனர். கூட்டணியில் இணைவதால் போர் ஏற்பட்டால் வங்கதேசம் கட்டாயம் அதில் இழுக்கப்படும் என்ற அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும் இப்போதைக்கு அதுபோல எந்தவொரு போரும் ஏற்படாது என்பதே அவர்கள் கருத்து!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *