கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த ஓர் ஈமு கோழி பண்ணையில், 2009-ம் ஆண்டு சில கோழிகள் காணாமல் போய்விட்டன.
இந்நிலையில், அதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்த அப்போதைய காவல்துறை ஆய்வாளர் கருணாகரன் என்பவர் ஈமு கோழிகளைக் கண்டுபிடிக்க முடியாமல், அதேபோன்ற ஈமு கோழி பண்ணைகள் நடத்திய சிலரைப் பிடித்து விசாரித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதோடு, அப்படி அவர் பிடித்து விசாரித்தவர்களில் ஒருவரான கோபால் என்பவரைப் பிடித்து வைத்துக் கொண்டு இரண்டு நாள்களாக வழக்கு போடாமல் சட்டவிரோத காவலில் வைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், அவரது சகோதரரிடம் மேற்படி வழக்கில் கோபாலைச் சேர்க்காமல் இருக்க பணம் கேட்டு செல்போனில் பேசியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அப்படி, ஆய்வாளர் பணம் கேட்டு பேரம் பேசிய ஆடியோவைப் பதிவு செய்து, அப்போதைய மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தினகரனிடம் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த அவர் காவல்துறை ஆய்வாளர் கருணாகரனை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அது தொடர்பான வழக்கு சென்னையில் உள்ள மனித உரிமைகள் பாதுகாப்பு நீதிமன்றத்தில், கரூர் வழக்கறிஞர் “தமிழ்’ இராஜேந்திரன் மூலமாக தாக்கல் செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், விசாரணை முடிவில் காவல்துறை ஆய்வாளர் கருணாகரனால் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்ட கோபால் என்பவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.