2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதிதாக கட்சி தொடங்கி தேர்தலில் வெற்றிபெற்று, தற்போது முதலமைச்சராக இருக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான தவெகவில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பல எம்.எல்.ஏக்கள், அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இலைக்கட்சியில் இருந்து விலகி விசில் கட்சியை நோக்கி செல்லத் தொடங்கினர்.
இதனால் தேர்தலில் தோல்வியடைந்தாலும் கட்சி தலைமை தைரியமாக இருந்த நிலையில், தற்போது ஒவ்வொருவராக கட்சியை விட்டு விலகுவது அதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோரால் மீண்டும் ஒரு இடைத்தேர்தலை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் சந்திக்கின்றன.
இதனிடையே, வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான போட்டிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாகவும், அதற்கான பல்வேறு வியூகங்களை வகுத்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
பழி தீர்க்குமா அ.தி.மு.க?
கொங்கு மண்டலம் எப்போதுமே அதிமுக கோட்டை என்பதாலேயே கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை த.வெ.க. முழுமையாக கபளீகரம் செய்தபோதும்கூட தாராபுரம் உள்ளிட்ட பல தொகுதிகளில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது. ஆனால், தாராபுரம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா பத்து நாட்களுக்குள்ளாகவே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமானதைக் கண்டு தொகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்ட அதிமுகவின் முக்கிய முகங்களான மாஜி அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ் ஆனந்தன், தற்போதைய தவெக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அதி.மு.க எம்.பியுமான சத்யபாமா உள்ளிட்டோர் த.வெ.சு.வில் ஐக்கியயாகிவிட்ட நிலையில், மக்களின் கோபத்தை அப்படியே வாக்குகளாக மடைமாற்றிவிட மக்களுக்கு பரிச்சயமான சக்திவாய்ந்த நிர்வாகிகள் இல்லாதது மைனஸ்.
இந்த பின்னணியில் தாராபுரம் தொகுதியில் பிரபலமே இல்லாத, எளிய பின்னணிகொண்ட பானுமதியை அ.தி.மு.க. வேட்பாளராக எடப்பாடி அறிவித்திருக்கிறார். கடந்த தேர்தலைப்போல வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, தலைமையிடமிருந்து பணம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே இந்த தொகுதியில் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க.வுக்கு செல்வாக்கு இல்லை. பா.ஜ.கவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. எனவே இவையெல்லாம் தாண்டி இக்கட்டான சூழலில்தான் அதிமு.க இங்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மதுராந்தகம் தொகுதியிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வமின்றியே இடைத்தேர்தலை எதிர்கொண்டிருக்கிறார்கள். 2026 தேர்தலில் மட்டுமல்லாமல், 2021 தேர்தலிலும் இங்கு வெற்றிபெற்ற மரகதம் குமரவேல், தவெசு ஆட்சி அமைந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே தன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெ.கவில் ஐக்கியமானதை அ.தி.மு.கவினர் மட்டுமல்ல, பொதுமக்களாலும்கூட ஜீரணிக்க முடியவில்லை. இது இம்முறை தேர்தலில் எதிரொலிக்கும்.
பா.ம.க.வே சரணம்!
கூட்டணிக் கட்சியான பா.ம.க.வுக்கு மதுராந்தகம் தொகுதியில் அதிக செல்வாக்கு இருக்கும் நிலையில், அக்கட்சித் தலைவர் அன்புமணி, ஆதரவு குறித்து அறிவிக்காமல் காலம் தாழ்த்துவதும் (செப்டம்பர் 13ம் தேதி நிலவரப்படி), பா.ஜ.கவுக்கு சொல்லிகொள்ளும் அளவுக்கு இங்கு செல்வாக்கு இல்லாமல் இருப்பதும் மதுராந்தகம் தொகுதி அ.தி.மு.க.வினரை சோர்வடைய வைத்துள்ளது.
இந்த நிலையில், மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கடந்த செப்டம்பர் 12ம் தேதி இங்கு வந்து அதி.மு.க.வினருக்கு உற்சாகமூட்டிச் சென்றிருக்கிறார்கள். ஆனால், வட ஆற்காடு மாவட்ட அதிமு.க.வினரிடம் மிகவும் பிரபலமான மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம். எடப்பாடியோடு முறுக்கிக்கொண்டிருப்பதால், அவரின் ஆதரவாளர்கள் தனித்தே நிற்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்தினாலும்கூட பாமக இங்கு முழுமையாக களப்பணியாற்றவில்லை என்றால் அதிமுகவுக்கு சிக்கல்தான்.
இந்த சூழலில் ஒரே ஆறுதலாக வேட்பாளர் கணிதா சம்பத் இருக்கிறார். இவர் 2011ல் ஜெயலலிதாவால் எம்.எல்.ஏவாக தேர்வுசெய்யப்பட்டவர். 2026, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும் கட்சி விசுவாசத்தோடு நின்றவர் என்பதால், அவருக்காக உழைக்க அ.தி.மு.க.வினர் ஆர்வமாக இருக்கிறார்கள்.
கூடவே, 2026ல் த.வெ.க. வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மகளான எழில் கேத்தரினுக்கு தற்போது வாய்ப்பு தரவில்லை. அதனால் அவரின் ஆதரவு நிலைகொண்ட த.வெ.க.வினரும் மரகதம் குமரவேல் மீதான கோபத்தில், அதி.மு.கவுக்கு வாக்களிப்பார்கள் என்பது அக்கட்சிக்கு பெரும்பலமாக இருக்கும் என விவரித்து முடித்தார்.
இதுகுறித்து அதிமுக தரப்பில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகத்திடம் பேசினோம். “மரகதம் குமரவேலுக்கு மதுராந்தகம் சொந்தத் தொகுதியாக இல்லாதபோதும், கட்சிக்காக அவர் எந்தவொரு தியாகத்தையும் செய்யாதபோதும் எம்.எல்.ஏ., எம்.பி. என பதவிகள் வழங்கி மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த அதி.மு.கவுக்கு அவர் செய்த துரோகத்தை அடிமட்ட தொண்டர்கள் மறக்கவே இல்லை.
அதேபோல, கடந்த தேர்தலில் த.வெ.கவுக்கு வாக்களித்த வாக்காளர்களும், எழில் கேத்தரினின் ஆதரவாளர்களும் மரகதம் மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். கணிதா சம்பத் குறைந்த வாக்கு வித்தியாசத்திலாவது வெற்றிபெற்றுவிடுவார்” என்றார் நம்பிக்கையுடன். தி.மு.க. தரப்பு குறித்து நம்மிடம் பேசிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி, “விஜய்க்கு மக்கள் செல்வாக்கு சரிந்துள்ளது.
அதிமு.கவில் வெற்றிபெற்று, மக்களை ஏமாற்றி த.வெ.க சென்றவர்களே மீண்டும் களமாடுவதால் அவர்கள்மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல எம்.எல்.ஏக்களை தக்கவைக்கும் திறன் எடப்பாடிக்கு இல்லை என்பதால், அதிமுகவுக்கு மீண்டும் வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை. எனவே இரு தொகுதிகளிலும் திமுக வெல்வது உறுதி என்றார் உறுதியுடன்.
தவெக தரப்பில் அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நம்மிடம், “தவெகவுக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்துவருகிறது. தனித்து நின்று பொதுத் தேர்தலை சந்தித்தபோது 35 சதவிகித மக்கள் தவெகவுக்கு வாக்களித்தனர். இப்போது கூட்டணி பலமும் சேர்ந்திருப்பதால் வாக்கு சதவிகிதம் 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. எனவே எங்களை எதிர்த்துப் போட்டியிடும் தி.மு.க. அதிமு.க. வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பது உறுதி” என்றார்.
தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது!
(தாரை இளமதி, கு.கணேஷ்குமார், அ.கண்ணதாசன்)

