நேற்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து இவர் தற்கொலை செய்துகொண்டார். தீயணைப்புத் துறையினர் இவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தார்கள். பிரேத பரிசோதனைக்குப் பிறகு இன்று இவருடைய உடல் தண்டையார்பேட்டையிலுள்ள இவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
இது தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்துப் போலீசார் விசாரணையையும் நடத்தி வருகிறார்கள்.
தற்போது இவருடைய மகன் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். அவர், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்கத் தலைவரும், நடிகருமான என்னுடைய தந்தை கே. ராஜன் சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்தார். நான் அவருடைய மூன்றாவது மகன். தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் என் தந்தையுடைய நண்பர்களுக்கு, நம்பி பணம் கொடுத்திருந்தார்.
அந்தப் பணம் எதுவும் திரும்பி வரவில்லை. ஒரு 5 வருடமாக என்னுடைய தந்தையும் அதைக் கேட்டுப் பார்த்தார். ஆனால், பணம் வரவே இல்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவருக்கு இதற்கு முன் மாரடைப்பும் ஏற்பட்டிருக்கிறது.
மீண்டும் நான் சென்று, அந்தப் பணத்தைக் கேட்டேன். ஆனால், யாரும் பணத்தைக் கொடுக்கவில்லை. பணத்தை திரும்பக் கொடுத்தால் எங்களுக்கு நல்லது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இதில் நடவடிக்கை எடுத்து வாங்கித் தர வேண்டும். ” எனக் கேட்டுக் கொண்டார்.