சேலம் மாவட்டம் ஏற்காடு அருகில் உள்ள வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் 8 வயது மகள் மேனகா முண்டகாம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். ஏற்காட்டில் போதிய அளவில் அரசு பேருந்து சேவைகள் இல்லாத காரணத்தால் தனியார் வாகனங்கள் மூலம் குழந்தைகளை நாள்தோறும் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.
மேனாகாவும் தனியார் வேன் மூலம் பள்ளிக் சென்று வந்திருக்கிறார். நேற்று காலை பள்ளிக்கு வேனில் சென்ற மேனகாவை ஓட்டுநர் ரங்கநாதன் இறக்கி விட்டிருக்கிறார்.

வேனின் பின்புறம் மேனாகா நின்றுக் கொண்டிருப்பதை அறியாத ஓட்டுநர் ரங்கநாதன், வேனை பின்னோக்கி இயக்கியிருக்கிறார். வேன் டயரில் சிக்கிய மாணவி மேனகா, படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஓட்டுநர் ரங்கநாதனை கைது செய்துள்ளனர். பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் தனியார் வாகனங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஏற்காடு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.