TNPSC: `சூப்பர் சிங்கர், சரிகமப மூலம் என்ன மாற்றம் நடக்குது?' – குரூப் 1 நேர்காணலில் சுவாரஸ்யம்!

Spread the love

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வின் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

இதன் மூலம் துணை ஆட்சியர் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய உயர் பதவிகளுக்கு பலரும் தேர்வாகியுள்ளனர்.

பிரிலிமினரி, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று கட்டங்களைக் கொண்ட இந்த தேர்வானது கடும் போட்டி நிறைந்தது. லட்சக்கணக்கானோர் எழுதுகிற இந்த தேர்வில் நேர்காணல் வரை சென்று வெல்ல முடியாதவர்களும் இருக்கின்றனர்.

தற்போது இந்தத் தேர்வில் வென்றுள்ள சீர்காழி அருகேயுள்ள கீழச்சாலை கிராம‌த்தைச் சேர்ந்த அபிநயா, தன்னுடைய நேர்காணல் அனுபவம் ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது என்கிறார்.

அவரிடம் பேசினோம்.

அபிநயா குடும்பத்தினருடன்

”விவசாயம் படிச்சவ சார் நான். அதுல முதுகலை முடிச்சுட்டு அதன் பிறகும் ரெண்டு வருஷம் கழிச்சேதான் போட்டித் தேர்வில் சீரியஸா கவனம் செலுத்த தொடங்கினேன். இது ரொம்ப லேட். போட்டித் தேர்வு மூலம் அரசுப் பணிக்குப் போகணும்னு முடிவெடுத்துட்டா, கல்லூரி இறுதியாண்டு படிக்கிற போதே முயற்சியைத் தொடங்குறதுதான் சரியானது.

கடந்த முறை மெயின் தேர்வுல போயிடுச்சு. அதனால இந்த முறை கூடுதல் நேரம் ஒதுக்கி முயற்சி செய்தேன். இன்டர்வியூ ஏப்ரல் மாதம் நடந்தது.

35 நிமிஷம் நடந்திருக்கும். நான்கு அதிகாரிகள் இருந்தாங்க. விவசாயம் தொடர்பாதான் ஆரம்பிச்சாங்க. நான் படிச்சதுல இருந்து நிறைய கேள்வி கேட்டாங்க. எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லிட்டு வந்தேன். ஸ்பீட் பிரேக்கர் மாதிரி ரெண்டு கேள்விகள் வந்தன.

நீங்க ஏன் விவசாயத்துல ரிசர்ச் லைன்ல போய் விஞ்ஞானி ஆக விரும்பலைன்னு முதல் கேள்வி. தனிப்பட்ட முறையில நான் பெயர் புகழ்னு வாங்கறதை விட விவசாயிகள் சிலருக்கு உதவ முடிகிற மாதிரியான நிர்வாகப் பணி மீது எனக்கு அதிக நாட்டம்னு சொன்னேன்.

அடுத்த கேள்வியா ‘நெல்லுக்கு ஊக்கத்தொகை தருவதை நிறுத்தச் சொல்லி மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக தமிழ்நாடு அரசு தெரிவித்ததையும், மத்திய அரசு அதை மறுத்ததையும்’ குறித்துக் கேட்டாங்க. உங்க கருத்து என்னன்னு கேட்டாங்க. மத்திய, மாநில அரசுகள் சொன்னதை அப்படியே சொல்லி… அது தொடர்பா நான் நினைச்சதையும் அப்படியே சொன்னேன்.

பத்து நிமிடத்துக்கு மேல இப்படியே போயிட்டிருந்தப்ப குறுக்கிட்ட ஒரு அதிகாரி ‘உங்க பொழுதுபோக்கு என்ன’னு கேட்டார்.

‘கிச்சன் கார்டன்’னு சொன்னதும், அங்கயும் கார்டனா, விவசாயம் போதும், வேற ஹாபி சொல்லுங்கன்னார்.

‘மெலடி சாங் கேட்பேன்’னு சொன்னதும் பேச்சு அப்படியே ‘சூப்பர் சிங்கர், சரிகமப ஷோ பக்கம் போயிடுச்சு. நல்ல வேளையா அந்த நிகழ்ச்சிகளை அப்பப்ப பார்த்திருந்ததால என்னால பேச முடிஞ்சது.

மக்கள்கிட்ட இந்த ஷோக்களுக்கு வரவேற்பு கிடைக்குது. இந்த நிகழ்ச்சிகள் நிகழ்த்திய மாற்றம்னு என்ன சொல்வீங்கனு கேட்டாங்க.

அபிநயா

பாடுற திறமை இருந்தாலும் முன்னாடில்லாம் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. குடும்பப் பின்னணி முதலான பல காரணிகள் தடங்கலா இருக்கும். இந்த நிகழ்ச்சிகள் வந்த பிறகு திறமை இருக்கிற எல்லோராலும் பங்கெடுக்க முடியுதுன்னு சொன்னேன். திறமையான மாற்றுத் திறனாளிகளும் சமீபமா பாடுறதைச் சுட்டிக்காட்டினேன்.

கொஞ்சம் இறுக்கமா தொடங்கின நேர்காணல் முடியறப்ப லேசாகி இருந்தது. அப்பவே ரிசல்ட் தொடர்பா எனக்குள்ளயும் ஒரு நம்பிக்கை துளிர்த்தது” என்றார் அபிநயா.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *