ஒரே நொடி! சுரங்கத்தை அப்படியே மூடிய மண்சரிவு! விடியவிடிய உயிருடன் சிக்கி தவிக்கும் 18 பேர்! திக்திக் | 7 Workers Killed and 18 Trapped After Methane Explosion Inside Sikkim Tunnel, Rescue opt on track

Spread the love

India

oi-Vigneshkumar

சிக்கிம்: கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுரங்க பாதை பணிகளின் போது ஏற்பட்ட விபத்து நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே மீண்டும் அதேபோல ஒரு மோசமான விபத்து சிக்கிம் மாநிலத்தில் நடந்துள்ளது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 18 பேர உள்ளே சிக்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு அனைவருக்கும் நினைவு இருக்கும். பருவமழையின் போது அங்கு சுரங்கப்பாதைக்கு கொட்டப்பட்டு இருந்த மண் திடீரென சரிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் பலர் சிக்கி உயிரிழந்தனர். இதற்கிடையே மீண்டும் அதுபோல அதிர்ச்சி விபத்து நடந்துள்ளது.

Sikkim accident

விபத்து

சிக்கிமின் நாம்சி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் என்எச்பிசி தீஸ்தா ஸ்டேஜ்-6 சுரங்கத்தில் தான் எதிர்பாராத விதமாக நேற்று விபத்து ஏற்பட்டுள்ளது. மீத்தேன் வாயு வெடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 18 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது. அவர்களை உயிருடன் மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்ன நடந்தது

என்எச்பிசி ஊழியர்கள், கட்டுமான ஊழியர்கள் என மொத்தம் 25 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. சுரங்கத்தின் உள்ளே சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் தேங்கியிருந்த மீத்தேன் வாயுவை அவர்கள் வெளியேற்ற முயன்றுள்ளனர். அப்போது திடீரென வெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு சுரங்க நுழைவு பகுதியை முற்றிலுமாக மூடிவிட்டதால் தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர். சிலர் வெளியேறிய போதிலும், பலர் சுரங்கத்தின் ஆழப்பகுதியில் சிக்கியுள்ளனர்.

மீட்பு பணிகள்

இது குறித்து தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, சிக்கிம் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எனினும், சுரங்கத்துக்குள் அதிகளவில் மீத்தேன் வாயு பரவியிருந்ததுடன் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் முதல் கட்ட மீட்பு முயற்சியே தோல்வியடைந்தது. மீட்புப் பணியில் ஈடுபட்ட சில வீரர்களுக்கே மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

என்டிஆர்எப் வீரர்கள் மீண்டும் முயன்ற போதிலும், விஷ வாயு மற்றும் மிகவும் குறுகலான சுரங்கப்பாதை காரணமாக முன்னேற முடியவில்லை. இதனால் மேற்கு வங்கத்தில் இருந்து விஷ வாயு பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய சிறப்பு மீட்புக் குழு அழைக்கப்பட்டது. மேலும், கூடுதல் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

விடிய விடிய மீட்பு பணிகள்

மாநிலத்தின் பல்வேறு துறைகளும் இணைந்து விடிய விடிய மீட்பு பணிகளை மேற்கொண்டன. இருப்பினும், சுரங்கத்துக்குள் இன்னும் அதிகளவில் மீத்தேன் வாயு இருப்பதாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாலும் மீட்பு பணிகளில் தாமதம் நிலவுகிறது. மேலும், சுரங்கம் எப்போது வேண்டும் என்றாலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதால் மீட்புப் பணி சவாலாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுரங்கத்தில் சிக்கியுள்ள 18 பேரையும் பாதுகாப்பாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உள்ளே சிக்கியுள்ள அனைவரையும் விரைந்து மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *