`கணிதம் கடினமல்ல' கற்றலில் விளையாட்டை புகுத்திய இளைஞர்; வெறுப்பை உதறி கணிதத்தை விரும்பும் குழந்தைகள்

Spread the love

“கணிதம் கஷ்டம்… எனக்கு கணிதமே வராது!” — பள்ளி வகுப்பறைகளில் பல குழந்தைகளிடம் இருந்து கேட்கப்படும் வார்த்தைகள் இவை. ஆனால், கணிதத்தைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல; அதை கற்றுக்கொடுக்கும் முறையில்தான் மாற்றம் தேவை என்கிறார், கல்விப் புதுமையாளர் அக்ஷய் ஜே. மஷேல்கர்.

விளையாட்டு, செய்முறைப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்து, குழந்தைகள் கணிதத்தைப் பார்த்துப் பயப்படாமல் அதை செய்து பார்த்துக் கற்றுக்கொள்ளும் வகையில் பல்வேறு கற்றல் கருவிகளை அவர் உருவாக்கியுள்ளார். இந்த முயற்சிகள் தற்போது இந்தியா முழுவதும் 250-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் சுமார் 2,000 ஆசிரியர்களும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

மஷேல்கரின் முக்கியமான கல்வி முயற்சிகளில் ஒன்று ‘Geomagic’. குறிப்பாக வடிவியல் பாடத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தில் உள்ள வடிவங்களைப் பார்த்து மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக, மாணவர்கள் பல்வேறு வடிவங்களைத் தாங்களே உருவாக்கலாம், பிரிக்கலாம், மாற்றி அமைக்கலாம். இதன் மூலம் கோணம், வடிவம், அளவு, பரப்பளவு போன்ற கணிதக் கருத்துகளை நேரடியாகச் செய்து பார்த்துப் புரிந்துகொள்ள முடிகிறது.

மாணவர்கள் விளையாடும்போது ஒரே கணிதச் செயல்பாட்டை மீண்டும் மீண்டும் செய்வார்கள். ஆனால், அதை ‘படிப்பு’ என்று நினைக்காமல் ஒரு விளையாட்டு அல்லது சவாலாக எடுத்துக்கொள்வார்கள். இதனால் கணிதத்தைக் கற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கமும் பயமும் குறைகிறது.

இதோடு நிற்காமல், ரோபோட்டிக்ஸ் கிட்கள், DIY எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் மற்றும் ஸ்மார்ட் ஆய்வகங்களையும் மஷேல்கர் உருவாக்கியுள்ளார். குறிப்பாக வளங்கள் குறைவாக உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் செய்முறை வழிக் கற்றல் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

அவர் நிறுவிய Experimindlabs மூலம் இந்தக் கருவிகள் பள்ளிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்தக் கல்விப் புதுமைகளுக்காக மஷேல்கருக்கு Grassroots Innovator Recognition 2026 விருது வழங்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த அங்கீகாரத்தை வழங்கினார்.

கர்நாடகாவின் சிர்சியில் வளர்ந்த மஷேல்கருக்கு சிறுவயதிலிருந்தே கருவிகள் எப்படி இயங்குகின்றன என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வம் இருந்தது. பொம்மைகள் மட்டுமல்லாமல், பழைய வானொலி, கேசட் பிளேயர், தொலைக்காட்சி போன்றவற்றையும் பிரித்து அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பார். சில நேரங்களில் அவற்றை மீண்டும் சரியாகப் பொருத்த முடியாமல் போனாலும், “இது எப்படி வேலை செய்கிறது?” என்ற கேள்வி அவரைத் தொடர்ந்து தேட வைத்தது.

இன்று அதே ஆர்வத்தை மாணவர்களிடமும் உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்.

“குழந்தைகள் கணிதத்தை வெறுப்பதில்லை. கணிதம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும் விதத்தையே அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை,” என்கிறார் மஷேல்கர்.

கணிதத்தை மனப்பாடம் செய்யும் பாடமாக இல்லாமல், செய்து பார்த்து, கேள்வி கேட்டு, தவறுகளைச் செய்து, அதிலிருந்து கற்றுக்கொள்ளும் அனுபவமாக மாற்ற வேண்டும் என்பதே அவரது முயற்சி.

ஒரு குழந்தை கணித வகுப்புக்குள் செல்லும்போது, “சரியான விடை கிடைக்குமா?” என்று பயப்படாமல், “இன்று நான் என்ன புதிதாகக் கண்டுபிடிக்கப் போகிறேன்?” என்ற ஆர்வத்துடன் செல்ல வேண்டும் என்பதே மஷேல்கரின் கல்விக் கனவாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *