கருவறையில் மூலவர் ரத்தினகிரீஸ்வரர் பெருமான் லிங்க ரூபனாக கம்பீரமாகக் காட்சிகொடுக்கிறார். இவரை வணங்கி கருவறையை வலம் வந்தால் விநாயகர், சுப்பிரமணியர், வைரப்பெருமாள், அதிகார நந்தி, நடராஜர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், விஸ்வநாதர் விசாலாட்சி, ஆரிய ராஜா, சண்டிகேஸ்வரர், துர்கை அம்மன், பைரவர், சூரியர், சந்திரர், நவகிரங்கள், அர்த்தநாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சந்நிதிகளை தரிசனம் செய்யலாம்.
இங்கு மலையேறுவது பிரத்தியேகமான அனுபவமாகத் திகழ்கிறது. காரணம் இந்த மலையைச் சுற்றி ஏராளமான மூலிகைச் செடிகளும் மரங்களும் உள்ளன. வீசும் காற்றில் அவற்றின் மருத்துவங குணங்கள் கலந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதை சுவாசிப்பதால் உடலின் நோய்கள் தீரும் என்றும் புத்துணர்ச்சி அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்குள்ள ஈசனின் திருமேனிக்குச் செய்யும் அபிஷேகப் பால் உறை ஊற்றாமலேயே இரண்டு மணி நேரத்தில் தயிராக மாறிவிடும் அற்புதம் நிகழ்கிறது. சித்திரை மாதத்தில் சூரிய பகவான் சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள நவ துவாரங்கள் வழியாகத் தன் கிரணங்களை நீட்டி சிவலிங்கத்தை ஸ்பரிசிக்கிறார்.
சுந்தரர் இந்தத் தலத்திற்கு வந்தபோது, மலையேற வழி இல்லாமல் இருந்தது. அதனால் அடிவாரத்தில் இருந்தபடியே சுவாமியை நினைத்துப் பதிகம் பாடினார் சுந்தரர். அப்போது சுவாமி ஒரு பெரிய பொன்முடிப்பை பூதகணம் ஒன்றிடம் கொடுத்தனுப்பினார். பூதகணம் அந்தப் பொன்முடிப்பை சுந்தரருக்கு வழங்கிய இடம்தான், ‘பொன்னிடும் பாறை’ என்று அழைக்கப்படுகிறது.