கரூர் அருகே நாட்டு துப்பாக்கியால் விவசாயி சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சேவாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் கருணகிரி (48). விவசாயத் தொழிலாளியான இவர் நேற்று (மே 22) இரவு 9.45 மணியளவில் வளையப்பட்டியில் காட்டுப் பகுதியில் தனது களத்து வீட்டில் உள்ள அவரது சித்தப்பாவுக்கு உணவு கொடுக்க இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, களத்து வீட்டின் அருகே பள்ளத்தில் சென்றபோது, பின்னால் மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் முதுகில் இடுப்பில் துப்பாக்கிச் சூட்டால் பலத்த காயத்துடன் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்குச் சென்று, வலி தாங்க முடியாமல் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், உடனடியாக அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர்.
அவரது உடம்பில் 10 பால்ரச குண்டுகளால் சுடப்பட்டது தெரியவந்தது. மேலும் தொடர் சிகிச்சை விவசாயிக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து, பாலவிடுதி போலீசார் இன்று மே 23 ஆம் தேதி காலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
முதல் கட்ட விசாரணையில், நிலப் பிரச்னையில் முன் விரோதம் காரணமாக, சந்தேகத்தின் பேரில் அவரின் உறவினர்கள் 4 பேரைப் பிடித்து, பாலவிடுதி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் அருகே நாட்டு துப்பாக்கியால் விவசாயி சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.