கலைஞரின் மஞ்சள் துண்டு… ஜோசியமா? வன்னியர்களின் அன்பா? நிர்மல் குமார் சொன்னதன் பின்னணி என்ன? – Kumudam

Spread the love

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் முன்வைத்திருந்த சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட் 21) கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் முதலமைச்சரின் மேஜையில் இருப்பதாகவும், அவை உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் முன்பு கூறியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது, அந்த ஆவணங்களை எப்போது திறக்க வேண்டும் என்பதற்கு ஜோசியம் பார்க்க வேண்டுமா என்று உதயநிதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்துவிட்ட்து என்று பேசினார். 

அமைச்சரின் இந்தக் கருத்தில் இடம்பெற்ற “மஞ்சள் துண்டு” குறிப்பு, கலைஞர் கருணாநிதியை நினைவுபடுத்துவதாக அமைந்தது. பல ஆண்டுகளாக கலைஞரின் அடையாளங்களில் ஒன்றாகவே மஞ்சள் துண்டு பார்க்கப்பட்டது. ஆனால், அது ஜோசியம் அல்லது மூடநம்பிக்கையின் காரணமாக அணியப்பட்டது என்பதை அமைச்சர் நிர்மல்குமார் மறைமுகமாக கூறினாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இதனிடையே, 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான நடவடிக்கைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. வன்னியர்களையும் உள்ளடக்கிய வகையில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பின்னணியில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், வன்னியர் சங்கம் சார்பில் ராமதாஸால் கலைஞருக்கு மஞ்சள் நிற துண்டு அணிவிக்கப்பட்டது. 

அந்த மஞ்சள் துண்டு பின்னர் கலைஞரின் வழக்கமான தோற்றத்தின் ஒரு பகுதியாக மாறியது. அதன் பின்னணியில் பல்வேறு அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவர் தொடர்ந்து மஞ்சள் துண்டை அணிந்து வந்தார்.

மறுபக்கம், அந்த காலகட்டத்தில் அவருக்கு கன்னம் பகுதியில் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினை காரணமாக, அப்பகுதியை கதகதப்பாக வைத்திருக்க சால்வை அல்லது துணியை பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் அந்த துண்டை தொடர்ந்து அணிவித்து வந்தார் கலைஞர் கருணாநிதி. 

இதனால், சட்டப்பேரவையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்த “ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டது” என்ற கருத்து தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. கலைஞரின் மஞ்சள் துண்டுக்குப் பின்னால் இருந்ததாக கூறப்படும் மருத்துவ மற்றும் அரசியல் பின்னணியைத் தாண்டி, அந்த அடையாளத்தை அரசியல் விமர்சனத்திற்குள் அமைச்சர் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *