`காங்கிரஸ் கட்சி ஒன்றும் தவெக-வுக்கு அடிமை கிடையாது!' – முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Spread the love

புதுச்சேரியில் தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி நீர் தமிழகத்துக்கு வருவது முழுமையாக நிறுத்தப்படும்.

அதனால் காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். அதனால் மத்திய அரசு அதற்கு அனுமதி கொடுக்கக்கூடாது. புதுச்சேரியில் ஆறு நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. ஆளுநர் உரையில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.4,500 கோடி, ஆசிய வங்கி மூலம் ரூ.4,500, உலக வங்கியில் இருந்து மீன்வளத்துக்காக ரூ.2,400 கோடி, சாலைகளை புதுப்பிக்க ரூ.1,500 கோடி என ரூ.14,300 கோடிக்கு பட்டியல் போட்டுக் கொடுத்துள்ளார்.

நாராயணசாமி | புதுச்சேரி காங்கிரஸ்
நாராயணசாமி | புதுச்சேரி காங்கிரஸ்

ஆனால், குறிப்பிட்ட அந்த நிதிகள் வந்துவிட்டதா? அது அந்தந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதா? இவர் சொல்லியிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகும். எனவே துணைநிலை ஆளுநரின் உரை உப்புச்சப்பு இல்லாத உரை.

முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் சிலிண்டர் மானியம், முதியோர் உதவித்தொகை உயர்த்தியதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ரூ.14,300 கோடியில் 80% அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டவைகளுக்குச் செல்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கு இருக்கும் தொகை வெறும் ரூ.2,300 கோடிதான். இதில் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்படும் என்று சொல்ல முடியாது.

மத்திய தணிக்கைக் குழுவினர் தணிக்கையின்படி ரூ.1,041.79 கோடியை செலவு செய்யாமல் ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இது நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருந்தது.

ஆனால் இப்போது இவர்களுக்கு இணக்கமான அரசு இருக்கிறது. மாநில அந்தஸ்து வாங்குவதில் பிரச்னை இருக்கிறது. மாநில அந்தஸ்து கேட்க முதல்வர், அமைச்சர்கள் சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

ஆளுநர் போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார். அவர் நிர்வாகத்தில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் என்பது அந்த கட்சித் தொண்டர்களின் உணர்வு.

விஜய்
விஜய்

ராகுல்காந்திதான் 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என்று, இந்தியா கூட்டணியில் அனைவரும் அங்கீகரித்திருக்கின்றனர். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக த.வெ.க தலைவர் விஜய் ஏற்றுக் கொள்வார்.

அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று காங்கிரஸ் அமைச்சர்கள் கூறியிருப்பது அவர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. அது அவர்களின் உரிமை. இந்தியா ஜனநாயக நாடு. த.வெ.க கூட்டணியில் நாங்கள் இருப்பதால், அவர்களுக்கு அடிமை கிடையாது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *