ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பெண்களுக்கான தட்டு எறிதல் பிரிவில் ஹரியானாவின் சீமா காலிராம்னா பங்கேற்றார்.
போட்டியில் 58.65 மீட்டர் தூரம் தட்டு எறிந்து மூன்றாம் இடம் பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார் சீமா காலிராம்னா. ஆறு வாய்ப்புகளில் நான்கு வாய்ப்புகள் தவறியபோதும், சோர்ந்துபோகாமல் அவர் எறிந்த அந்த ஒரு வீச்சு, ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கையையும் பதக்கப் பட்டியலை நோக்கி உயர்த்தியிருக்கிறது.
களத்தில் எறிந்த ஒவ்வொரு வீச்சிலும் தன் வியர்வையையும், கண்ணீரையும் விதையாகத் தூவி, இன்றைக்கு காமன்வெல்த் மேடையில் வெண்கலப் பதக்கமாய் அறுவடை செய்திருக்கிறார்.
சீமாவிற்கு விளையாட்டு என்பது ரத்தத்திலேயே ஊறிய ஒன்று. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் கூடைப்பந்து மற்றும் ஈட்டி எறிதல் வீரரான இவரது தந்தைதான், சீமாவின் திறமையைச் சிறுவயதிலேயே கண்டறிந்து விளையாட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
தேசிய அளவில் தட்டு எறிதல் வீரராகத் திகழ்ந்த அவரது கணவர் ரவீந்தர் காலிராம்னாதான் சீமாவின் பயிற்சியாளராக இருந்து, அவரை ஒவ்வொரு வீச்சிலும் செதுக்கி வருகிறார். விளையாட்டு வீரராக மட்டுமின்றி, பிவாநியில் உள்ள சவுத்ரி பன்சிலால் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல் துறையில் முனைவர் (PhD) பட்டத்துக்கான படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.