International
oi-Nantha Kumar R
ரோம்: இத்தாலியை சேர்ந்த பெண் ஒருவர் வாங்கிய லாட்டரிக்கு பரிசு விழவில்லை என்று கூறியதால் அதனை குப்பையில் வீசினார். ஆனால் அந்த லாட்டரிக்கு தான் ரூ.10.90 கோடி பரிசு விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அந்த லாட்டரியை குப்பைகளில் தேடிய நிலையில் கடைசியில் என்ன நடந்தது? அவர் கோடீஸ்வராக மாறினாரா? இல்லையா? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
இத்தாலின் தெற்கு பகுதியில் பிடோன்டா என்ற நகர் உள்ளது. இங்குள்ள கடையில் பெண் ஒருவர் அவ்வப்போது லாட்டரி வாங்கி வந்தார். இவர் எப்போதுமே ஒரே எண்ணில் தான் லாட்டரி வாங்குவார். 2, 4,8,10, 51 என்ற எண்களை குறிவைத்து தான் அவர் லாட்டரி வாங்கி வந்தார். இதுவரை அவருக்கு பெரிய அளவில் பரிசு விழுந்தது கிடையாது.

ஆனாலும் அந்த பெண் அதிர்ஷ்டம் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்தார். என்றாவது ஒருநாள் லாட்டரியில் பரிசு கிடைக்கும் என்று தொடர்ந்து நம்பி லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தார். அப்படித்தான் அவர் சமீபத்தில் ஒரு லாட்டரி வாங்கினார். அந்த லாட்டரிக்கான குலுக்கலும் நடந்தது.
இதையடுத்து அந்த பெண் லாட்டரி வாங்கிய கடைக்கு சென்று தனது எண்ணுக்கு பரிசு விழுந்ததா? என்பதை கேட்டார். அதற்கு ஊழியர் அந்த பெண் வாங்கிய லாட்டரிக்கு பரிசு எதுவும் விழவில்லை என்றார். இதனால் விரக்தியடைந்த அந்த பெண் தான் வாங்கிய லாட்டரியை கடையின் அருகே உள்ள குப்பை தொட்டியில் வீசினார்.
அதன்பிறகு அங்கிருந்து வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த குடும்பத்தினர், அவரை உற்சாகமாக வரவேற்றதோடு, லாட்டரி எங்கே? நீங்கள் வாங்கிய லாட்டரிக்கு தான் ரூ.10.90 கோடி பரிசு விழுந்துள்ளது என்று இன்பஅதிர்ச்சி கொடுத்தனர். இதில் ஷாக்கான அந்த பெண், லாட்டரிக்கு பணம் விழவில்லை என நினைத்து அதனை குப்பை தொட்டியில் வீசியதாக கூறி குடும்பத்தினரின் தலையில் இடியை இறக்கினார்.
இதில் ஷாக்கான குடும்பத்தினர் உடனடியாக லாட்டரி வீசப்பட்ட குப்பை தொட்டி இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தனர். ஆனால் அங்கு குப்பை தொட்டி காலியாக இருந்தது. குப்பை தொட்டியில் இருந்த குப்பையை தூய்மை பணியாளர்கள் லாரியில் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து குப்பையை கையாளும் நிறுவனத்தை அவர்கள் தொடர்பு கொண்டனர். அந்த நிறுவனத்தினர் நிர்வாகி ராபர்டோ நிக்கோலோ டோஸ்கானாவிடம் நடந்த சம்பவத்தை கூறினர். அவர் உதவி செய்வதாக அறிவித்தார்.
மேலும் குப்பையை சேகரித்து சென்ற லாரியை அடையாளம் காட்டினார். அந்த லாரியில் குப்பைகள் ஏராளமாக இருந்தன. பரிசு விழுந்த லாட்டரி கிழிந்து விடாமல் மெதுவாக தூய்மை பணியாளர்கள் தேடினர். 2 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு லாட்டரி தூய்மை பணியாளர் ஒருவரின் கையில் சிக்கியது. இதனை கேட்டவுடன் லாட்டரி வாங்கிய பெண் ஆனந்த் கண்ணீர் வடித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட குப்பை கையாளும் நிறுவனம், தூய்மை பணியாளர்களுக்கு உரிய கூலியை கொடுத்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் ரூ.10.90 கோடி பரிசு விழுந்த லாட்டரியை வாங்கி கொண்டனர். தற்போது அந்த பெண் கோடீஸ்வரராக மாறி உள்ளார்.