குமரி: 'ஞாயிற்றுக்கிழமைகளில் 99 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி' – சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்!

Spread the love

இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாதலமாக விளங்குகிறது. இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் ஆகிய முக்கடல் சங்கமத்தில் நீராடவும்,  சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தைக் காணவும் உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணியர் கன்னியாகுமரிக்கு வருகின்றனர்.

கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப்பாறை, திருவள்ளுவர் சிலை, கண்ணாடிப்பாலம் ஆகியவற்றைக்காண கூட்டம் அலைமோதுகிறது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணியருக்குத் தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட கலெக்டர் பிரதாப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் கன்னியாகுமரி ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு மேலாளர் கார்த்திக் கூறுகையில், “கன்னியாகுமரி கடற்கரை சாலையில் தமிழ்நாடு ஹோட்டல் செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான இந்த ஹோட்டல்கள் கன்னியாகுமரிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

மாதிரி படம்
சிக்கன் பிரியாணி

இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.​ ரூ.249 மதிப்புள்ள சிக்கன் பிரியாணி ரூ.99-க்கு வழங்கப்பட உள்ளது. அதன் அறிமுக விழா இன்று (ஜூலை 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

99 ரூபாய்க்கான சிக்கன் பிரியாணி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு ஓட்டல் வாகன நிறுத்துமிடத்திலும் (Car Parking) ஓட்டல் பின்புறம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள நுழைவாயிலிலும் ஸ்டால் அமைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

உயர்தரமான சீரகசம்பா அரிசி, தேர்ந்தெடுக்கப்பட்ட மசாலா பொருட்கள் மற்றும் தரமான பொருட்களைக் கொண்டு புதிய சிக்னேச்சர் பிரியாணி தயாரிக்கப்படுகிறது. எங்களின் புதிய பிரியாணி அனைத்து விதமான சுவை விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்படுகிறது.

வழக்கமாக ரூ.249-க்கு வழங்கப்படும் இந்தச் சிக்கன் பிரியாணி உணவு ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99க்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 12.30 மணி முதல் 3.30 மணி வரை வழங்கப்படும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *