குறுக்க இந்த கெளசிக் வந்தா.. அம்பை இடைத் தேர்தலில் களமிறங்கும் சீமான்! 6 தொகுதியிலும் நாதக போட்டி! | Seeman to Contest Ambasamudram as NTK Announces Candidates for Six Bypolls

Spread the love

Tamilnadu

oi-Rajkumar R

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவி நடத்தப்படுலாம் என்ற அறிவிப்பு தமிழக அரசியல் சூழலை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது. தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் வேகப்படுத்தியுள்ள நிலையில்,இடைத் தேர்தலில் அனைத்து 6 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அத்தோடு, அம்பாசமுத்திரம் தொகுதியில் தாமே நேரடியாக களமிறங்கப் போவதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, விராலிமலை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 6 தொகுதிகள் காலியாகின. இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையமும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் கருவிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை தீவிரப்படுத்தி வருகின்றன.

Seeman Ambasamudram NTK

இடைத்தேர்தல்

குறிப்பாக திமுக, தமிழக வெற்றிக் கழகம், அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து ஆலோசித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், காலியாக உள்ள அனைத்து 6 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும் என்று தெரிவித்தார். மேலும், அம்பாசமுத்திரம் தொகுதியில் தாமே போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

சீமான்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான், வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடம் அதிகமாக இருந்தது. ஆனால் அந்த தேர்தலில் அவர் தோல்வியை சந்தித்தார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தங்களிடம் வருத்தம் தெரிவித்ததாக சீமான் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அவர் மீண்டும் சட்டப்பேரவைக்குள் செல்லும் முயற்சியாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

அம்பாசமுத்திரம் தொகுதி

அம்பாசமுத்திரம் தொகுதியை தேர்வு செய்தது குறித்து விளக்கமளித்த சீமான், கட்சி நிர்வாகிகளுடனும், ஆதரவாளர்களுடனும் ஆலோசனை நடத்திய பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். காலியாக உள்ள 6 தொகுதிகளில் எந்த தொகுதி தமக்கு அரசியல் ரீதியாக சாதகமாக இருக்கும் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும், அதன் முடிவாக அம்பாசமுத்திரம் தொகுதி தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். “இந்த தொகுதியில் நான் போட்டியிடுவது உறுதி. இடைத்தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். பல தேர்தல் களங்களை சந்தித்திருக்கிறேன். இந்த களத்தையும் அதே உறுதியுடன் சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்றும் சீமான் தெரிவித்தார்.

திருச்சி கிழக்கு தொகுதி

அம்பாசமுத்திரம் தொகுதி ஏற்கனவே தென் மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இப்போது சீமான் நேரடியாக போட்டியிட உள்ளதாக அறிவித்திருப்பதால், அந்த தொகுதியில் போட்டி மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையில், திருச்சி கிழக்கு தொகுதி தொடர்பாகவும் பரபரப்பு அதிகரித்துள்ளது. அந்த தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடலாம் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதுகுறித்து திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் இந்த விவகாரம் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம்

மற்றொரு புறம், தமிழக வெற்றிக் கழகமும் இந்த இடைத்தேர்தலை மிக முக்கியமான அரசியல் சோதனையாக கருதி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறவுள்ள முதல் முக்கிய தேர்தல் என்பதால், இந்த தேர்தலின் முடிவு அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதேபோல் அதிமுகவும் காலியாக உள்ள தொகுதிகளில் மீண்டும் தனது செல்வாக்கை நிரூபிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதிமுக

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனத்துகுப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், அதிமுகவுக்கும் இந்த இடைத்தேர்தல் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் பிரசாரத்தை தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *