வி.சி.க-வின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு கட்டுக்கடங்காத கூட்டத்தால் பாதியிலேயே கைவிடப்பட்டதும், அந்தக் கூட்டநெரிசலுக்கு மத்தியிலும் “த.வெ.க-வுடன் இணைந்து பயணிப்போம்’ என திருமா அறிவித்திருப்பதும் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளான ஆகஸ்ட் 17-ம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை ஒருங்கிணைக்க முடிவெடுத்தது, அக்கட்சித் தலைமை. மாநாடு சிறப்பான ஒருங்கிணைப்புடன் நடக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு முழுக்கப் பயணித்து கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தியிருந்தார், திருமாவளவன். மாநாட்டுத் திடலுக்குப் பெருங்கூட்டம் வந்தபோதிலும் முறையான ஒருங்கிணைப்பு இல்லாததாலும், மேடையைச் சுற்றி பாதுகாப்பு இல்லாததாலும் மாநாடு பாதியிலேயே கைவிடப்பட்டிருக்கிறது.