கோவை சிறுமி கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது | Goondas Act on two arrested in Coimbatore girl’s murder case

Spread the love

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 21ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர் மறுநாள் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் அச்சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் சிறுமியைக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்தததும், அவரது நண்பரான மோகன் குற்றத்தை மறைக்க உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கார்த்தியை ஜூன் 5ம் தேதி வரையிலும், மோகனை மே 27ம் தேதி வரையிலும் நீதிமன்ற காவலில் வைக்க சூலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நிதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே இன்று மோகனின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகின்ற ஜூன் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கார்த்தி மற்றும் மோகன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள இருவரிடமும் போலீசார் வழங்கினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *