ஏப்ரலில் சென்னையில் வைத்து டெல்லியை வீழ்த்தியது சிஎஸ்கே. அந்தப் போட்டியில் சதம் அடித்து அதற்கான முக்கிய காரணமாக சஞ்சு சாம்சன் இருந்தார். இந்தப் போட்டியிலும் சாம்சனின் அற்புதமான இன்னிங்க்ஸ்தான் வெற்றிக் கோட்டை சிஎஸ்கேவினைத் தொட வைத்துள்ளது.
நடப்பு சீசனில் ஏற்கனவே ரிசப் பண்ட் மற்றும் ரஹானேவின் கேப்டன்ஷிகள் சில சந்தர்ப்பங்களில் கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸின் அணித்தலைவராக அக்ஸர் படேல் எடுக்கும் சில முடிவுகளும் அதே தட்டில் அவரை நிறுத்திப் பார்க்கின்றன.

களத்தை எதிரிக்குக் கடினமாக்கி தனது படைக்கு எளிதாக்கும்படியான முடிவுகளை எடுப்பதுதான் ஒரு படைத்தளபதி கற்றுக் கொள்ள வேண்டிய முதல் போர்த் தந்திரம். கிரிக்கெட்டிலும் அத்தகைய முடிவுகள்தான் முக்கியமானவை. அதை அப்படியே தலைகீழாகச் செய்திருந்தார் அக்ஸர். டாஸ் எனும் ஒற்றைச் சாளரம் எண்ணற்ற கதவுகளை திறக்க வல்லது என்பதால் அத்தருணத்தில் ஒரு கேப்டன் எடுக்கும் முடிவு மொத்த போட்டியின் போக்கையும் மாற்ற வல்லது.
அக்ஸர் அங்கேயே தனக்கான வாய்ப்பை தவற விட்டிருந்தார். களம் போகப் போக இன்னமும் பேட்டிங்கிற்கு சவால் விடுவதாக இருக்கும், எனவே பேட் செய்து இலக்கை நிர்ணயித்து விடுவதே தங்களை பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கும் என அக்ஸர் கருதினார்.
ஆனால் டி20 பிட்ச்களுக்குரிய வழக்கமான நடைமுறையிலிருந்து மாறி ஆரம்பத்தில் இருந்தே நான்காவது நாள் இந்திய டெஸ்ட் களம் போல பௌலிங்கிற்கு குறிப்பாக சுழல் பந்துவீச்சிற்கு ஆதரவுக்கரம் நீட்டுவதாக களம் அமைந்திருந்தது. விளைவு பவர்பிளேயின் ஆறு ஓவர்களில் மூன்று ஓவர்களை அகீல் ஹொசைனை கெய்க்வாட் வீச வைத்தார். வெறும் 37 ரன்கள் மட்டுமே வந்து சேர்ந்ததும் அதன் காரணமாகத்தான்.