நாளை சட்டமன்றம் கூடவிருக்கிறது. தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறது. பட்ஜெட் தாக்கலுக்கு சரியாக 24 மணி நேரம் முன்பு எதிர்க்கட்சித் தலைவரை வீடு புகுந்து கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை.

தஞ்சாவூரில் நடந்த போராட்டத்தில் முதல்வரை கண்ணியக்குறைவாக பேசியதற்காக 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உதயநிதியை வீடு புகுந்து கைது செய்திருக்கின்றனர். உதயநிதி பேசியதை யாராலும் ஏற்க முடியாது. அது அருவருக்கத்தக்க கண்ணியமற்ற மொழிதான். அவரின் பேச்சுக்கு வக்காளத்து வாங்க ஒரு காரணி கூட நம்மிடம் இல்லை. ஆனால், அந்தப் பேச்சுக்காக பேசிய மறுநாளே வீடு புகுந்து கைது செய்வதை எப்படி ஏற்க முடியும்? அதுவும் ஒரு அவதூறு பேச்சுக்கு கைது செய்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலவரத்தை தூண்டுதல், குற்றவியல் சதி என பயங்கரமான பிரிவுகளிலெல்லாம் ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் மீது வழக்கு தொடர்வது எல்லை மீறிய செயல்.
இது தவெக அரசின் சகிப்புத்தன்மையற்ற செயலையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஆட்சி அமைந்தவுடன் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், சமீபத்தில் திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன் போன்றோரும் முதல்வரை கண்ணியக்குறைவாக பேசியதற்காக கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீதும் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பல பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. கண்ணியக்குறைவான பேச்சுக்கு மன்னிப்பை கோரிவிட வேண்டும் என்பது மட்டும் ஆளும் தரப்பின் நோக்கமாக தெரியவில்லை, பேசுபவர்களை எப்படியாவது கைது செய்து சிறையில் அடைத்து விட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறதோ எனும் சந்தேகம் எழுவதை தவிர்க்கவே முடியவில்லை.

ஒரு பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தினால் அதற்காக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரலாம். ஆளும் அரசுக்கு இந்த வாய்ப்பெல்லாம் ரொம்பவே எளிது. மாறாக, போலீசை வைத்து தடாலடியாக வீடு புகுந்து கைது செய்வதுதான் பிரச்னை. மேலும், ஒரு பேச்சுக்கு கைது செய்யலாமா வேண்டாமா என்பதை எதை கொண்டு முடிவு செய்வீர்கள்? சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், ‘முதல்வரை அவதூறாக பேசினால்தான் கைது செய்வீர்களா? சீமானை அவதூறாக பேசினால் நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?’ எனக் கேட்டது. இந்தப் புள்ளிதான் கவனிக்க வேண்டியது. இப்படி அவதூறு வழக்குகளுக்கு கைது என இறங்கினால், காவல்துறை ஆட்சியில் இருப்போரின் ஏவல் வேலையாளாக மட்டுமே இருக்கும். முதல்வருக்கு இருக்கும் கண்ணியம் அந்தஸ்து எல்லாம் சீமானுக்கு இல்லையா? சீமானை அவதூறாக பேசியதாக அவர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஏன் இப்படி தடாலடி கைதெல்லாம் நடக்கவில்லை?
ஏனெனில், அவதூறு வழக்குகளுக்கு கைது என்பதே ஆளும் வர்க்கத்தின் மனநிலையை பொறுத்தது. பெரும்பாலும் அதை தங்களுக்கு எதிரான கருத்துகளை முடக்கவே பயன்படுத்துவர். தங்களுக்கு எதிர்நிலையில் நிற்பவர் பேசினால் ஒரு நியாயம், தங்களோடு கூட்டாக நிற்பவர் பேசினால் ஒரு நியாயம் என்றுதான் அணுகுவார்கள். எல்லா ஆட்சிகளிலுமே அதிகாரத்தின் குணம் இதுதான். எடப்பாடியின் ஆட்சியில் திருநெல்வேலி கலெக்டர் அலுவலல தீக்குளிப்பு சம்பவத்திற்கு கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதையும், பெண் பத்திரிகையாளர்களை கேவலமாக பேசிய ஒரு அரசியல் பிரமுகர் ஜாலியாக வெளியே சுற்றிக் கொண்டிருந்ததையும் பார்த்திருக்கிறோமே. கடந்த திமுக ஆட்சியிலும் அரசின் மீது விமர்சனங்களை வைத்த யூடியூபர்கள் சிலர் மீது மட்டும் குறிவைத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டதே. அதே பாரபட்சமான அரசியல் பழிவாங்கல் மனநிலையோடுதான் இப்போதைய தவெக அரசும் செயல்பட்டு வருகிறது.

முதல்வருக்கு இருக்கும் கண்ணியமும் மரியாதையும் எல்லாருக்கும் இருக்கிறதல்லவா? எனில், சீமான் தாக்கல் செய்த வழக்கில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காரைக்குடியில் மாமன்ற கூட்டத்தில் ஒரு உறுப்பினர் எழுந்தரித்து குறிப்பிட்ட நடிகையின் பெயரை சொல்லி அவர் படத்தை மாட்டுங்கள் என சண்டை செய்தாரே? அவரை ஏன் கைது செய்யவில்லை? இதனால்தான் சொல்கிறேன் அவதூறு வழக்குகள் ஒரு அரசியல் ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தாங்கள் விரும்பாத தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒரு கருத்து வந்தால் மட்டும்தான் ஆட்சியாளர்கள் வெகுண்டெழுந்து போலீஸை விரட்டுவார்கள்.
ஆனால், இஷ்டத்துக்கு ஆளும் அரசின் மனம் போன போக்கில் சட்டத்தை வளைத்து நடவடிக்கை எடுப்பது எப்படி சரியாக இருக்கும்? இதே நிலை நீடித்தால் நாளை இந்த அரசின் மீது நியாயமான விமர்சனங்களை வைக்கும் பத்திரிகையாளர்கள் மீதும் அரசியல் விமர்சகர்கள் மீதும் கூட அநியாயமான கைது நடவடிக்கைகள் பாயக்கூடும்.
உதயநிதி எதிர்க்கட்சித் தலைவர் வேறு. அவர் எங்கே ஓடிவிடப் போகிறார். நாளை சட்டமன்றம் கூடுகிறது. அங்கே எதிர்க்கட்சித் தலைவர் இருக்க வேண்டாமென முதல்வர் விரும்புகிறாரா? வீடுபுகுந்து செய்யப்படும் தடாலடி கைதுகள் அப்படியான ஐயப்பாட்டைதான் ஏற்படுத்துகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டமன்றத்தை நடத்தி வெறுமென துதிபாடும் கூடமாக கோட்டையை மாற்றப் போகிறீர்களா? முதல்வர் மட்டும் மக்களின் பிரதிநிதி அல்ல. எதிர்க்கட்சித் தலைவரும் மக்களின் பிரதிநிதிதான்.

அவரின் குரல் ஒடுக்கப்படுவது மக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவதற்கு சமம். இப்படி பேசியதற்காக கைது என நிலைமை தொடர்ந்தால் எதிர்க்கட்சி வரிசையில் இன்னும் சில மாதங்களில் யாருமே இருக்கமாட்டார்கள்.
ஜனநாயகன் படத்தில் வில்லனான பிரகாஷ் ராஜை போலீஸ் விஜய் சட்டத்திட்டங்களை மனதில் கொள்ளாமல் வீடுபுகுந்து சாட்டையடி அடித்து தடாலடியாக கைது செய்து மாஸாக வசனம் பேசுவார். எதிர்க்கட்சித் தலைவரின் தடாலடி கைதை பார்க்கையில் நிஜத்திலும் முதல்வர் விஜய் அதே மாயப்பிம்பத்தோடுதான் சுற்றிவருகிறாரோ எனும் சந்தேகமும் வலுவாக எழுகிறது. திரைப்படங்களில் மட்டுமே ஹீரோவின் விருப்பத்துக்கு ஏற்ப சட்டத்திட்டங்களை வளைக்க முடியும். நிஜத்தில் அப்படியெல்லாம் செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதை முதல்வருக்கு யாராவது எடுத்துக் கூற வேண்டும்.!